ஓலா நிறுவனத்தில் 30 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,100 கோடி) ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:
வாடகை கார் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனத்தில் 30 கோடி டாலரை ஹுண்டாய் மோட்டார் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து, இந்த முதலீடு தொடர்பான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படலாம். இந்த முதலீட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் நிலையில், ஹுண்டாய் நிறுவனம், இந்திய நிறுவனமொன்றில் மேற்கொள்ளும் இரண்டாவது முதலீடு இதுவாகும்.
இதற்கு முன்பாக, வாடகை கார் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ரெவ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஹுண்டாய் ரூ.100 கோடியை முதலீடு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தகுதி வாய்ந்த பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சந்தையில் நிலவும் ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு கருத்து தெரிவிக்க கூடாது என்பது எங்களது கொள்கை என்றார்.