மத்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி தனது பொன் விழா ஆண்டில் ரூ.15,000 கோடி வர்த்தகத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ். இஸபெல்லா தெரிவித்துள்ளதாவது:
ரெப்கோ வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.15,000 கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இதில், வங்கி திரட்டிய டெபாசிட் ரூ.8,669 கோடியாகவும், வழங்கிய கடன் ரூ.6,337 கோடியாகவும் உள்ளது.
ரெப்கோ வங்கியைப் பொருத்தவரையில் தொடர்ந்து லாபம் ஈட்டியே வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ரூ.100 கோடிக்கும் மேலாக நிகர லாபத்தை பெற்று வருகிறது. இந்த நிதியாண்டில் ரூ.110 கோடிக்கு மேலான நிகர லாபம், பங்குதாரர்களுக்கு 20 சதவீத ஈவுத் தொகை என்பதை நோக்கி முன்னேறி வருகிறது.
தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை மூலம், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, போன்ற நலத்திட்ட உதவிகளை தாயகம் திரும்பியோருக்கு அளித்து வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் இதற்காக ரூ.7.20 கோடி செலவழிக்கப்பட்டு சுமார் 37,500 பேர் பயனடைந்துள்ளனர். இது ரெப்கோ வங்கியின் வரலாற்றில் முதல் முறை என்றார் அவர்.
இலங்கை, பர்மா, வியத்நாம் மற்றும் பிற நாடுகளிலிருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக 1969-ஆம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ரெப்கோ வங்கி. இந்த வங்கி, 108 கிளைகள், 10 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்கள் மற்றும் 1,300 பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.