சென்னை: சில மாதங்களுக்கு முன் இணையத்தில் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பிய 'லட்சுமி’ குறும்படத்தின் இயக்குநரின் இயக்கத்தில், நயன்தாரா நடிக்க உள்ள திரைப்படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் 'லட்சுமி’ என்ற குறும்படம் இணையத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டிருந்த கதைக்காக இணையத்தில் பெரும் சர்ச்சையான விவாதங்களைக் கிளப்பியது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் என இரு தரப்பாக அதனைப் பற்றிய விவாதங்கள் எழுந்தது.
இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற புதிய குறும்படம் ஒன்று வெளியானது. வளர் இளம் பருவ பெண் எதிர்கொள்ளும் கர்ப்பம் ஒன்றிணைப் பற்றிய இந்த குறும்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்பொழுது இயக்குநர் சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இவர் இதற்கு முன்னதாக சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் கிஷோர் நடிப்பில் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி' என்னும் திரைப்படத்தினை இயககியுள்ளார். இந்தப் படமானது வரும் மார்ச்மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சார்ஜுனின் புதிய படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் கதை என்ன என்பது குறித்து, இயக்குநர் சர்ஜுன் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு சில மாதங்களாகத் தெரியும். என்னுடைய சமீபத்திய குறும்படமான ‘மா’ வெளியான பிறகு என்னை அழைத்த அவர், நயன்தாராவுக்கு ஏதேனும் கதையிருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் ஒரு 'ஒன் லைன்' இருப்பதாகக் கூறியவுடன், மகிழ்வுடன் அவர் நயன்தாரவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். சுமார் ஒரு மணி நேரம் கதை கேட்டவுடன் நயன்தாரா படத்தில் நடிக்க சம்மதித்தார். அத்துடன் எனது குறும்படமான 'மா' திரைப்படத்தினை தான் பார்த்ததாகவும், மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
புதிய படமானது ஒரு முழுமையான திகில்படமாக உருவாக உள்ளது. சில சமீபத்திய படங்கள் போல் காமெடி கலந்த திகில் படமாக இல்லாமல், சீரியஸான திகில்படமாக இருக்கும். இதர நடிகர் நடிகைகள் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.