‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை வென்ற செந்தில் கணேஷ் பெற்ற பரிசு என்ன தெரியுமா?

சொந்த வரிகளில் எழுதப்பட்ட இவர்களின் பாடல்கள் வாழ்வியலுடன் கலந்த பாடல்களாக விவசாயிகள், நெசவாளர்கள் என எளிய மக்களின்...
‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை வென்ற செந்தில் கணேஷ் பெற்ற பரிசு என்ன தெரியுமா?

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்று செந்தில் கணேஷ் வெற்றியாளாரானார்.  நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ் முதல் இடத்தை பிடித்து சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றது அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இத்தகைய அங்கீகாரங்கள் அவர்களை மேன்மேலும் உற்சாகத்துடன் இயங்க உதவும் என்றனர் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 சீஸன் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. எப்போதும் திரையிசைப் பாடல்களுக்கே முதல் உரிமை தந்து வந்த சேனல், இந்த சீஸனில்தான் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி தம்பதியர் சமேதமாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரின் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதுடன் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வந்தது. இவர்கள் பாடிய பல பாடல்கள் மக்கள் இசையை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. சொந்த வரிகளில் எழுதப்பட்ட இவர்களின் பாடல்கள் வாழ்வியலுடன் கலந்த பாடல்களாக அமைந்தன. விவசாயிகள், நெசவாளர்கள் என எளிய மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்து உருக்கமாகப் பாடலாக பாடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை இத்தம்பதியருக்குப் பெற்றுத் தந்தன.

சூப்பர் சிங்கர் சீனியர் 6 சீஸனின் இறுதிப்போட்டிக்கான நிகழ்ச்சி, நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

22 போட்டியாளர்கள் கலந்துகொண்ட ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில், ஸ்ரீகாந்த், ரக்‌ஷிதா, ஷக்தி, செந்தில் கணேஷ், அனிருத், மாளவிகா ஆகிய 6 பேரும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில், ஒவ்வொருவரும் இரண்டு பாடல்கள் பாடினர்.

இறுதிப் போட்டி வரை முன்னேறிய பின் செந்தில் கணேஷ் கடைசி பாடலாக 'தாண்டவகோனே’ என்ற பாடலை பாடினார். வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு முறை அறிவிக்கப்பட்டது. அந்த வாக்களிப்பில் முதல் இடத்தை பிடித்த செந்தில் கணேஷ் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச் சென்றார்.

இரண்டாவது இடத்தை ரக்‌ஷிதாவும், மூன்றாவது இடத்தை மாளவிகாவும் பிடித்துள்ளார்.

‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச் சென்ற செந்தில் கணேஷுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படுகிறது. இரண்டாவது இடம் பிடித்த ரக்‌ஷிதாவுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடித்த மாளவிகாவுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 

விரைவில் செந்தில் கணேஷ், ஸ்ரீகாந்தும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com