சென்னை: 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகெங்கும் 1000 கோடிக்கு மேல் வசூலித்த தனது ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் கதை விவாதம் மற்றும் முதற்கட்டப் பணிகளில் இயக்குநர் ராஜமெளலி கவனம் செலுத்தி வந்தார். அவரது அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன.
இந்நிலையில் எஸ்.எஸ். ராஜமெளலியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இரு முன்னணி தெலுங்கு நாயகர்கள் நடிக்கவுள்ள எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்திற்கான பூஜை ஞாயிறன்று நடைபெற்றது. இந்த பூஜையை நடிகர் சீரஞ்சிவி கலந்து கொண்டு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
படபூஜை முடிவடைந்த நிலையில் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த விபரம் வருமாறு:
கதை: விஜயேந்திர பிரசாத்.
எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.
ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார்.
இசையமைப்பாளர் கீரவாணி.
தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில்.
கிராபிக்ஸ் சூப்பர்வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன்.
ஆடை வடிவமைப்பாளர் ரமா ராஜமெளலி.
வசனம் சாய் மாதவ் புரா - கார்க்கி.
திரைக்கதை மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தனய்யா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
பொதுவாக ராஜமெளலி படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும். ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர். இருவரில் ஒருவர் வில்லன் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் படக்குழுவினர் எதையுமே உறுதிப்படுத்தவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.