வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த நடிகர் விசாகனை செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2010-ல் தொழிலதிபர் அஷ்வினைத் திருமணம் செய்தார் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவர்களுக்கு வேத் என்கிற மகன் உண்டு. செளந்தர்யா - அஷ்வின் இடையே கருத்துவேறுபாடு நிலவியதால், இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்கள். பிறகு இருவருக்கும் விவகாரத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் செளந்தர்யா மறுமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையைச் சேர்ந்த கோவை முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் சகோதரரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகன். வஞ்சகர் உலகம் படத்தில் நடித்து அடுத்ததாக சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ள விசாகனுடன் செளந்தர்யா ரஜினிகாந்துக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக அறியப்படுகிறது. விசாகன் ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அமெரிக்காவில் எம்பிஏ படித்து தமிழ்நாட்டில் மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அடுத்து ஜனவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செளந்தர்யா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.