தேசிய விருது பெற்ற ஆடுகளம், பொல்லாதவன் படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாரன் கூட்டணி வடசென்னையில் மீண்டும் இணைந்துள்ளது. வடசென்னையில் வாழும் அன்புவின் 35 வருட கால வாழ்க்கை (ட்ரயாலஜி) படமாக்கப்பட்டுள்ளது.
வடசென்னை படத்தின் கதையை மூன்று பாகங்களாக உருவாக்கத் திட்டுமிட்டுள்ளார் வெற்றிமாறன். எனினும் முதல் பாகத்துக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்தே இதர பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரம் விளையாட்டு வீரர் உலக சாம்பியனாக உழைத்துக் கொண்டிருக்கையில் எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பதை சமூக அரசியல் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் வடசென்னை திரைப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.