சென்னை: 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'பேட்ட' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்துக்கு இப்படத்தில் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், ஹைதராபாத் மற்றும் வாரணாசி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பேட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டது. திட்டமிட்டதை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.