சென்னை: பரபரப்பைக் கிளப்பி வரும் 'மீ டூ' விவகாரத்தில் மற்றோர் பகுதியாக நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 'மீ டூ' விவகாரத்தில் மற்றோர் பகுதியாக நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
அருண் வைத்யநாதன் இயக்கத்தில் அர்ஜுன், பிரசன்னா , வரலக்ஷ்மி ஆகியோர் நடித்த 'நிபுணன்' படத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அவர் தற்போது தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
'அர்ஜுன் நாயகனாக நடித்த இரு மொழிப் படத்தில் நானும் நடித்தேன். பிரபல நடிகர் ஒருவருடன் நடிப்பது குறித்து மகிழ்ச்சியாக இருந்த நான் அதற்குப் பிறகு அந்த மகிழ்ச்சியை உணரவில்லை. ஏனெனில் ஒரு காதல் காட்சியின்போது அர்ஜுன் என் அனுமதியில்லாமல் திடீரென்று என்னைக் கட்டிப்பிடித்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் சொல்லாமல், என் அனுமதியும் பெறாமல் திடீரென்று என்னைக் கட்டி அணைத்தது எனக்குள் காயத்தை ஏற்படுத்தியது.
பின்னர் இப்படி ஒரு காட்சி வைத்துக்கொள்ளலாமா என்று இயக்குநரிடம் அர்ஜுன் கேட்டார். சினிமாவாக இருந்தாலும் நெருக்கமான காட்சிகளில் நடிகையின் அனுமதி இல்லாமல் அப்படிச் செய்தது தவறுதான்.
அதற்குப் பிறகு எந்த நெருக்கமான காட்சிக்கும் ஒத்திகை என்ற பெயரில் நடக்கும் எந்தச் செயலுக்கும் நான் ஒத்துழைக்கவில்லை. அதை அனுமதிக்கவும் இல்லை. நான் படப்பிடிப்பு முடியும் வரை அர்ஜுனிடம் இருந்து விலகி நின்றேன். அதிகாரத்தைப் பயன்படுத்தி யாரும் யாருக்கும் பாலியல் தொந்தரவு, பாலியல் சீண்டல் தரக்கூடாது.
இவ்வாறு ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.