தன்னைப் பற்றி தவறான செய்திகள் வெளியாவதைத் தடுக்கவேண்டும் என சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையை அவதூறாக விமர்சித்ததாக கைதானார் சின்னத்திரை நடிகை நிலானி. காவல்துறையினர், நிலானி மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை நிலானிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியைக் காதலித்து வந்தார். பிறகு கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்தார்கள். எனினும் தன்னைத் திருமணம் செய்யுமாறு காந்தி, நிலானியை வற்புறுத்தியதால் இதை எதிர்த்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இரு நாள்கள் கழித்து, சென்னை கேகே நகரில், தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார் காந்தி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காந்தி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று வந்த நிலானி, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இரண்டு நாள்களுக்கு முன்பு காந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டார். ஊடகங்களில் நான் தலைமறைவு என்றும் எனக்கும் காந்திக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் விடியோவுடன் செய்தி வெளியிடுகிறார்கள். அந்த விடியோவின் உண்மைத்தன்மை தெரியாமல் இதுபோன்ற செய்தி வெளியிடுவதை உடனே நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.