குழந்தைகளிடையே பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக சிவகார்த்திகேயன் ‘மோதி விளையாடு பாப்பா’ என்றொரு குறும்படத்தில் நடித்திருக்கிறார். அக்குறும்படம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. குறும்படத்தின் நோக்கம் மகாகவி பாரதியாரின்
‘பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’
- எனும்வரிகளை சின்னஞ்சிறு மனங்களில் எளிதில் பதியும் படி செய்வதே!
அதற்கேற்ப சிவகார்த்திகேயன் வாயிலாக பள்ளிக் குழந்தைகளுக்கு மிக மிக எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில் நல்ல தொடுகை மற்றும் கெட்ட தொடுகை பற்றி இக்குறும்படத்தில் விளக்கியிருக்கிறார்கள். வீட்டில் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விளக்கச் சிரமப் படுபவர்கள் இக்குறும்படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டலாம். சென்னை அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த அவலம் இனியொரு சிறுமிக்கு ஏற்படக் கூடாது. சென்னைச் சிறுமி மட்டுமல்ல சர்வ தேச அளவில் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை அக்குழந்தைகள் அவரவர் வயதுக்குத்தக்கபடி எளிதில் புரிந்து கொள்ளத்தோதாக இம்மாதிரியான விழிப்புணர்வுக் குறும்படங்கள் வெளிவர வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகி விட்டது. சர்வ தேச அளவில் #METOO CAMPAIGN எனும் பெயரில் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் பிரபலங்கள் வரை தாங்கள் குழந்தைப் பருவத்தில் அனுபவித்த பாலியல் அச்சுறுத்தல்களைப் பகிர்ந்து கொள்வதை இணையத்தில் வாசிக்க நேர்கையில் இம்மாதிரியான விழிப்புணர்வுக் குறும்படங்களால் மட்டுமே நமது குழந்தைகளை நாம் முன்னெச்சரிக்கை செய்து காக்க முடியும் என்பது தெளிவாகிறது.