இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் மூத்த நடிகர் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது, திருமண மண்டபத்தினுள் அவர் நுழைந்தபோது ரசிகர் ஒருவர் சிவகுமார் முகத்தின் முன்பு செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயன்றார். முகத்துக்கு நேராக செல்போனை நீட்டியதால் அதிருப்தியடைந்த சிவகுமார் செல்போனைத் தட்டிவிட்டு முன்னே சென்றார்.
இந்தச் சம்பவத்தின் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம், தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டபோது அவருடன் இணைந்து செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவக்குமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்தார்கள். பிறகு, அந்த இளைஞருக்கு ரூ. 21,000 மதிப்புள்ள செல்போனை வழங்கினார் சிவக்குமார். இந்நிலையில் அவர் மீண்டும் அதேபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.