ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் பேருந்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். புல்வாமாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 40 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியப் படங்களில் நடிக்க அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கமும் இணைந்துள்ளது. இதனால் இந்தியப் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்கக்கூடாது. தற்போது எந்தப் பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு இந்தியப் படங்களில் வாய்ப்பளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாகிஸ்தானிலும் இந்தியப் படங்கள் வெளியிடக்கூடாது. இதையும் மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினால் பிறகு அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத்தின் ஊழியர்கள் அதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளமாட்டார்கள். நாடு தான் முக்கியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.