அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாடகர் கார்த்திக், தன் மீதான மீ டூ புகார் குறித்து முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
என்னைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சியான உலகை உருவாக்கவே நான் விரும்புவேன். என்னைப் பற்றி ட்விட்டரில் பெயர் குறிப்பிடாமல் குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் கூறப்பட்டன. என் மனசாட்சிப்படி ஒருவருடைய விருப்பத்துக்கு எதிராக எந்த ஒரு மனிதரையும் நான் காயப்படுத்தியதில்லை, துன்புறுத்தியதில்லை. ஒருவரை அசெளகரியமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் நான் நடத்தியதில்லை. கடந்தகாலங்களில் என்னுடைய நடவடிக்கைகளால் யாராவது பாதிப்படைந்திருந்தால் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். ஒருவருடைய நடவடிக்கைகள் விளைவுகளை உருவாக்கும் என்பதை நான் நம்புகிறேன். நான் மீ டூ இயக்கத்தை முழுவதுமாக ஆதரிக்கிறேன். எவருடைய புகாரிலும் உண்மை இருந்தால் நான் மன்னிப்புக் கேட்கவும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளேன். யாருடைய வாழ்விலும் களங்கம் விளைவிக்க நான் விரும்பவில்லை.
உயிருக்கு அச்சுறுத்தலான உடல்நலக் குறைபாடால் என் தந்தை பாதிக்கப்பட்டுள்ளார். என் ரசிகர்களும் என் நண்பர்களும் அவர் மீண்டு வர பிரார்த்திக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
என் தந்தையின் நிலைமையால் ஜீ தமிழின் சரிகமபா நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. என் பாடல்கள் குறித்த விவரங்கள் தகுந்த நேரத்தில் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.