அஜித் போல இல்லாமல் பத்து வருடங்களுக்குப் பிறகும் அதே தோற்றத்துடன் இருக்கும் நயன்தாரா: ‘விஸ்வாசம்’ விமரிசனம்

பத்து வருடங்களுக்குப் பிறகும், தூக்குதுரையின் தோற்றதிற்கு வயதாகி இருந்தாலும் நிரஞ்சனா மட்டும் அதே தோற்றத்துடன் இருப்பது...
அஜித் போல இல்லாமல் பத்து வருடங்களுக்குப் பிறகும் அதே தோற்றத்துடன் இருக்கும் நயன்தாரா: ‘விஸ்வாசம்’ விமரிசனம்

விஸ்வாசம் படத்தை அதிகாலை ஒரு மணிக்கு FDFS காட்சியில் பார்த்தேன். ‘தல'யைத் திரையில் காண்பதற்கு முன்பே, ஆரவாரமான ரசிகர் கூட்டம் தனது கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டது. கண்கொள்ளாக் காட்சி அது. நான் எத்தனையோ படங்களை FDFS காட்சியில் பார்த்துள்ளேன். ஆனால், ‘யாராவது ஒழுங்கா விமரிசனம் கொடுக்கலை... செஞ்சுருவேன்" என்று எந்தப் படத்தின் ஆரம்பத்திலும் பார்வையாளர்களில் ஒருவர் கத்தியபடி எச்சரிக்கை செய்ததில்லை. அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள விஸ்வாசத்தையே தெளிவாகப் படத்தலைப்பாக வைத்துள்ளார்கள். 

தங்களுடைய நான்காவது கூட்டணிக்கு, மிகக் கவனமாக,  ஓர் எளிமையான கதையைத் தேர்ந்தெடுத்து, வணிக விஷயங்களைச் சரியாகப் பின்பற்றியுள்ளார் இயக்குநர் சிவா. சரியான இடைவெளியில் பாடல்களையும் சண்டைக் காட்சிகளையும் அமைத்து, படத்தில் தொய்வு ஏற்படாதபடிப் பார்த்துக்கொண்டுள்ளார். பிரமாண்டமான அறிமுகக் காட்சிக்குப் பிறகு, அதாவது அக்காட்சியில் தூக்குதுரை அப்படியே சுழன்று வந்து வணக்கம் வைக்கிறார், ‘கோயில் திருவிழாக்கள் சமுதாயத்துக்கு எந்தளவுக்கு அவசியம்’ என்பதை ஒரு நீண்ட வசனத்துடன் கூறுகிறார். ‘திருவிழாக்கள் தெய்வீக உணர்வை ஒற்றுமையுடன் வெளிப்படுத்தும் இடங்கள், புலம்பெயர்ந்தவர்கள் கூடு திரும்ப ஒரு காரணி’ என்கிறார். விஸ்வாசம் படத்தைத் திருவிழா என்றுதான் விளம்பரம் செய்தார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது அவருடைய விஸ்வாசமான ரசிகர்கள் திரையரங்கில் நடனமாடுவது குறித்துத்தான் அவர் வசனம் பேசியிருக்கக்கூடும். 

அதற்காக அஜித் ரசிகரல்லாத பார்வையாளர்களுக்குப் படத்தில் ஒன்றுமில்லை என்று அர்த்தமில்லை. சொல்லப் போனால், இங்குதான் சிவா நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இறுக்கமில்லாத, இயல்பான ஒரு அஜித்தை நமக்குத் தந்திருக்கிறார்.  அடாவடியான ஆளான தூக்குதுரையின் வெள்ளந்தியான குணமும் குறும்பும் அவருடைய வசீகரத்துக்குப் புத்துணர்ச்சி தருகின்றன. வெகுகாலத்திற்குப் பிறகு, குறும்பான காட்சிகளால் திரையில் கொண்டாட்டமாக வெளிப்படுகிறார் அஜித். இமானின் பாடல்கள் என்னைப்  பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், அஜித் அப்பாடல்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி ஆடுவதைப் பார்ப்பதே ஒரு விருந்து. படத்துக்காக அஜித் பெரிதாக மெனக்கெட்டிருப்பது நன்குத் தெரிவதோடு அவருடைய பிரகாசமான முகமும் பலமடங்கு வெளிப்பட்டுள்ளது. 

படத்தின் அடுத்த ஆச்சரியம் நயன்தாரா. இதற்குமுன் இவர் கதாநாயகியாக நடித்த மசாலா படமான ‘வேலைக்காரனில்’ அவருடைய லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குரிய நியாயம் செய்யப்படவில்லை. ஆனால், இங்கு தூக்குதுரையின் கிராமத்திற்கு வரும் வலுவான மனோதிடம் கொண்ட, தன்னியல்புடைய மருத்துவர் கதாபாத்திரத்தில் அற்புதமாகத் தொடக்கம் அவருக்கு அமைந்துள்ளது. தூக்குதுரையைக் கவர ஊரிலுள்ள அனைவரும் வரிசைக்கட்டி நிற்கும்போது இவர் மட்டும் அவர் மீது ஆர்வம் இல்லாமல் தனித்து நிற்கிறார். தூக்குதுரைக்கு அவர்மீது ஆர்வம்தான் என்றாலும், தன் தகுதிக்கு மீறியவர் என்பதையும் உணர்ந்துள்ளார். இதனால் ஒரு நயமான ரொமான்ஸுக்கு அடித்தளமிட்டுள்ளார் சிவா. அந்தக் காதல் நீங்கள் கணிக்கும் ஒவ்வொரு திருப்பங்களிலும் சற்று மாற்றுப் பாதையிலேயே பயணிக்கிறது. இப்படியாக இடைவேளை வரை சென்ற படம் அதற்குப் பிறகு சறுக்க ஆரம்பிக்கிறது.

இயக்குநர் மிகவும் பிரயத்தனப்பட்டுக் கட்டமைத்த காதல் கதையும் அதன் அடுத்தக்கட்டங்களும் கதையில் புதிதாக ஒரு வில்லனை நுழைப்பதற்காகப் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. ஒரு சிறந்த வில்லன் பாத்திரம், கதாநாயகனுடன்  'தத்துவார்த்தமாக மாறுபடும் இரட்டையர்' போல இருக்கவேண்டும். அதாவது கதாநாயகனைப் போன்றே நோக்கங்கள் உடையவனாகவும் ஆனால் சூழ்நிலைகளால் இருவரும் எதிரெதிர் திசையில் பயணிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் படம் பார்ப்பவர்கள் எந்தப் பக்கம் சாய்வதென்று குழம்புவார்கள்.  சிவா இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஆனால், வில்லனுக்காக அவர் அமைத்திருக்கும் ஒருவரிக் கதையில் வில்லனின் பழிவாங்கும் நோக்கமே தவறாக உள்ளது. ஆக, இந்தக் கதாபாத்திரம் இன்னும் சில சண்டைக்காட்சிகளுக்கான சந்தர்ப்பங்களை மட்டும் ஏற்படுத்தி, படத்தைத் தர்க்கமே இல்லாத செண்டிமெண்ட் களத்திற்குள் தள்ளி, இதுவரையில்லாத நாடகத்தனமான கிளைமாக்ஸை அமைத்துவிடுகிறது. 

தூக்குதுரைக்கும் நிரஞ்சனாவிற்கும் இடையேயான முரண்பாடுகள் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லியிருக்கவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஆரம்பத்தில் பெரிதான எதிர்பார்ப்புடன் காண்பிக்கப்படும் நிரஞ்சனா பாத்திரம், பிறகு படத்தில் அவ்வப்போது மட்டும் தலைக்காட்டுவதுபோல புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவர் ஏகப்பட்ட நிறுவனங்களை நிர்வகிப்பவராகக் காண்பிக்கப்பட்டாலும், தன் கணவர் தாக்கப்படும்போது அவருக்கு உதவ ஒரு வழியும் யோசிக்காமல்  இருக்கிறார். ஆனால், ‘லூசு கதாநாயகிகள் சூழ்’ தமிழ் சினிமாவை வைத்துப் பார்க்கும்போது, கதாநாயகி ஒரு வேலையில் இருப்பதாகக்  (அரை மனத்துடன்தான் செய்திருக்கிறார்கள் என்றாலும்) காண்பித்திருப்பதே பெரிய முன்னேற்றம்தான். நயன்தாரா சினிமாவில் வெவ்வேறு பாணிகளை முயற்சிப்பதில்லை என்கிற குறையை யாரும் சொல்ல முடியாது என்றாலும், அவர் தன்னுடைய தோற்றத்தில் மாற்றங்களை முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி விரும்புவேன். அப்படிச்  சொன்னாலும், படத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகும், தூக்குதுரையின் தோற்றதிற்கு வயதாகி இருந்தாலும் நிரஞ்சனா மட்டும் அதே தோற்றத்துடன் இருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அட, கதாநாயகர்கள் மட்டும் ஏன் எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும்! 

இந்த எதிர்பார்ப்பு இருக்கிறதே அது மிகவும் வேடிக்கையானது.  நாம் என்னதான் தவிர்க்க முயன்றாலும் அது நம் மண்டைக்குள் ஊடுருவி,  சிலவற்றின்  மீதான நமது புரிதலைப் பெரிதாகப் பாதிக்கத்தான் செய்யும்.  மேலும், அந்த எதிர்பார்ப்பே, நீங்கள் அவ்வப்போது இனிய அதிர்வுக்கு ஆளானாலும் கூட, படத்திற்குச் சாதகமான பக்கமே தராசின் முள்ளைச் சாய்க்கும். மேலும் நல்லவேளையாக, என்னுடைய கொடுங்கனவுகளை நனவாக்கி விடாத விஸ்வாசம் ஒரு ஆச்சர்யமே!

தமிழில்: ப்ரியா கதிரவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com