சர்க்கரை நோயும் குடும்பமும்

பன்னாட்டு நீரிழிவுநோய் குழுமம் (இன்டர்நேஷனல் டயாபடீஸ் ஃபெடரேஷன்) இந்த ஆண்டு சர்க்கரை நோயைப் பற்றி விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த

பன்னாட்டு நீரிழிவுநோய் குழுமம் (இன்டர்நேஷனல் டயாபடீஸ் ஃபெடரேஷன்) இந்த ஆண்டு சர்க்கரை நோயைப் பற்றி விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த கொடுக்கப்பட்டுள்ள கருத்தின் தலைப்பு சர்க்கரை நோயும் குடும்பமும் (டயாபடீஸ் அண்ட் ஃபேமிலி).
கடந்த 1991 முதல் பன்னாட்டு நீரிழிவு நோய்க் குழுமம் உலக மக்களிடையே பலவித தலைப்புகளில் இந்நோய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் அதிகமானதால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதிலும் மிகவேக முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், சர்க்கரை நோயின் தாக்கமும் அதன் பின்விளைவுகளும் குறைந்தபாடில்லை.
ஆகவே, இவ்வருடம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்நோய்பற்றித் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், உணவு முறையை எடுத்துக் கொண்டால், குடும்ப உறுப்பினர்கள் பண்டிகை நாள்களிலும், சில முக்கியமான நாள்களிலும் இனிப்பு வகைகளை சாப்பிட்டு விடுகின்றனர். மேலும், உணவு முறைகளின் முக்கியத்துவத்தை அறியாமல், சர்க்கரை சத்து, கொழுப்புச் சத்து, உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளை அடிக்கடி உண்டு விடுகின்றனர். இதனால் சர்க்கரை நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். 
உடற்பயிற்சி செய்தாலும், மாத்திரைகள் சாப்பிட்டாலும், இன்சுலின் ஊசி போட்டாலும் இந்நோய் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை. சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை நோயின் பாதிப்பால் பலவித இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. சிலர், காபி, டீ போன்ற பானங்களில் கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, வெல்லம் போன்றவற்றைப் போட்டு சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிக்காது என்ற கருத்தில் உள்ளனர். இது முற்றிலும் தவறு. இவற்றின் மூலமும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். 
அதேபோன்று, இனிப்புச் சுவை அதிகம் உள்ள பழங்களினாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். இதை உணராமல் நிறைய குடும்பத்தினர் தாங்கள் பழங்களை உண்பதோடு மற்றவர்களுக்கும் பழங்களைத் தந்து அடிக்கடி உண்ணச் செய்வதாலும் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் வருவதில்லை. 
இனிப்பு குறைவான பழங்களாக இருந்தாலும்கூட அதையும் அதிகமாக உண்ணக்கூடாது. மருத்துவர் அறிவுரையின்படி அளவோடு சாப்பிடுவது நல்லது. ஆனால், காய்கறி, கீரை போன்றவற்றை அளவில்லாமல் உண்ணலாம். அது போலவே, பட்டாணி, பொட்டுக் கடலை, சுண்டல் வகைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பெரும்பாலான நேரங்களில் ஒருவரை அவருடைய குடும்பத்தினரோ, உறவினர்களோ, நண்பர்களோ உணவு முறையின் முக்கியத்துவத்தை உணராமல் தவறுதலாக வழிநடத்தி விடுகின்றனர். அது பல நேரங்களில் ஆபத்தில் முடிகின்றது. 
சர்க்கரை நோய் வராமல் இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டிய மிக முக்கியமாகும். ஒவ்வொரு நாளும் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். நடத்தல் நல்லது. நடக்க முடியாவிடினும் ஏதாவது ஓர் உடற்பயிற்சி செய்வது நல்லது. 
உடற்பயிற்சியுடன் யோகா மற்றும் தியானமும் சேர்ந்து செய்வது நல்லது. இவற்றின் மூலமும் இந்நோய் வராமல் தடுக்கப்படுகின்றது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரிடம் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அன்றாடம் அவர் உடற்பயிற்சி செய்த உறுதுணையாக இருக்க வேண்டும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை நேரம் தவறாமல் எடுத்துக்கொள்ள, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உதவி செய்ய வேண்டும். ஒருமுறை வாங்கப்பட்ட மாத்திரைகள், ஊசிகள் முடிவதற்கு சில நாள்களுக்கு முன்பாகவே, மேற்கொண்டு மாத்திரைகளை, ஊசி மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
பல நாள்கள் மாத்திரைகளையோ இன்சுலின் ஊசியோ போட்டுக் கொள்ளவில்லையெனில் இந்நோய் மீண்டும் பாதிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்களாக இருந்தால் அவர்களுக்கு அவரின் குடும்ப உறுப்பினர்களின் கவனம் அதிகம் தேவைப்படுகிறது. 
இன்சுலின் ஊசி தேவைப்படுகிற அளவுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்ட சிலர் இருக்கலாம். அவ்வாறு பாதிக்கப்பட்டவர் சிறு குழந்தையாய் இருப்பின், அக்குழந்தையின் தாய் அல்லது தந்தை இன்சுலின் ஊசி போடுவதற்குக் கற்றுக் கொள்வது நல்லது. அப்படிக் கற்றுக் கொண்டால் ஒவ்வொரு முறையும் ஊசிக்காக தங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. 
குழந்தைகள் மட்டுமல்ல, இந்நோயால் பாதிக்கப்பட்டவர் வயதானவராய் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு இன்சுலின் ஊசி போடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது போன்றவர்களின் வசதிக்காகவே முன்பே சுத்தப்படுத்தப்பட்ட ஊசிகள் (பிரீஸ்டெர்லைஸ்ட் டிஸ்போஸபில் சிரிஞ்ச்) பல வருடங்களாக உபயோகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் இன்சுலினை குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கலாம். மேலும், பேனா வடிவிலும் இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளும் முறை சில ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இந்த முறையிலும் குடும்ப உறுப்பினர்கள் இன்சுலின் ஊசியை சர்க்கரை நோயாளியாக இருக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் போட்டு விடலாம்.
தாழ் சர்க்கரை நிலை (ஹைப்போகிளிஸிமியா லோ ஷுகர்) என்று ஒரு வகை உள்ளது. அதாவது, சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 70 %- க்கு (மி.கி) குறைவாக சென்று விடுவதை தாழ் சர்க்கரை நிலை என்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இதனைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
ஆனால், தற்போது குளுக்கோ மீட்டர்கள் உபயோகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை தெரிந்து கொள்வது மிகவும் எளிது. 
நோயாளியின் குடும்ப உறுப்பினரே, ஒரு துளியைவிடக் குறைவான ரத்தத்தில் சோதனை செய்து ஐந்து நிமிடத்திற்குள் தாழ் சர்க்கரை நிலையைக் கண்டுபிடித்து விடலாம். தேவைப்பட்டால், உடனே குளுக்கோஸ் கொடுக்க வேண்டும். ஒரு வேளை குளுக்கோஸ் இல்லாத நிலை ஏற்பட்டால், சர்க்கரை கலந்த நீரைக் கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார். 
அப்படி எதுவும் கொடுக்காமல் விட்டுவிட்டால் நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும். 
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், மயக்கமுற்று, நினைவிழந்த நிலைக்குச் சென்று விட்டால், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
நினைவிழப்பு எதனால் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுக் கூற இயலாது. சில நேரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து விடுவதாலும், சில நேரங்களில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகரித்து விடுவதாலும் நினைவு இழக்கக்கூடிய நிலை ஏற்படும்.
இப்படி நினைவிழந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான சிகிச்சைகளை அளித்தால் நிச்சயமாக குணமாகி விடுவார்கள். பெரும்பாலும் உடனடியாக மருத்துவரைப் பார்க்காமல் காலம் தாழ்த்துவதால்தான் குணமடைவதில் சிரமம் ஏற்படுகிறது. 
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு வேறு பல பிரச்னைகளும் வரலாம். அதாவது அவர்களுக்குப் பக்கவாதம் ஏற்பட்டாலோ, பார்வைக் கோளாறு ஏற்பட்டாலோ, இதயக் கோளாறு ஏற்பட்டாலோ, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டாலோ அல்லது கால்களை இழந்தாலோ அவர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பு மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது. 
இன்றைய காலகட்டத்தில், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் உதவி இல்லாததால்தான் நிறைய சர்க்கரை நோயாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, எல்லாருமே சர்க்கரை நோய் வராமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. ஒரு வேளை அது வந்துவிட்டால், அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், மருத்துவர் கூறும் அறிவுரைகளைக் கடைப்பிடித்து, நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். 
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் மேற்கொள்ளும் உணவு முறைகளையும் , உடற்பயிற்சிகளையும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவரும் மேற்கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. அப்படிச் செய்து வருவது, அவர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுத்திட உதவியாக இருக்கும். 
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களில் முப்பது வயதைக் கடந்தவர்கள், கட்டாயமாக ஆண்டுக்கு ஒருமுறை சர்க்கரை நோய் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளவும், வந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதனைக் கட்டுக்குள் வைக்கவும் முடியும்.
தற்போது உள்ள சமுதாயம் படித்த சமுதாயம். நாம் ஏற்கெனவே பல நோய்களை முற்றாக ஒழித்து விட்டோம். சில நோய்களைக் கணிசமான அளவு குறைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு, மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வந்த பெரியம்மை, போலியோ போன்ற நோய்களைத் தடுப்பூசிகள் மூலம் ஒழித்துள்ளோம். நீரால் பரவக்கூடிய பல அபாயகரமான நோய்கள் பரவாமல் தடுத்துள்ளோம். உயிர்க்கொல்லி நோய் என்று அறியப்பட்ட எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையையும் அண்மைக்காலத்தில் கணிசமாகக் குறைத்திருக்கிறோம்.
ஆனால், சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை. மாறாக, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இந்நோயைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அரசுகள் மட்டும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் போதாது. அரசு சாரா அமைப்புகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும்கூட அரசின் முயற்சிகளுக்கு துணை நின்றால்தான் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும். 
இன்று (நவ. 14) உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்

கட்டுரையாளர்:
சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com