அடித்தட்டு மக்களுக்கான அஞ்சலக வங்கி 

இந்திய அஞ்சல் துறை சார்பில் நாடு முழுவதும் அஞ்சலகங்களில் வங்கிச் சேவை அளிக்கும் (பேமென்ட் பேங்க்') திட்டம் செப்டம்பர் முதல் தேதி புது தில்லியில் தொடங்கியுள்ளது


இந்திய அஞ்சல் துறை சார்பில் நாடு முழுவதும் அஞ்சலகங்களில் வங்கிச் சேவை அளிக்கும் (பேமென்ட் பேங்க்') திட்டம் செப்டம்பர் முதல் தேதி புது தில்லியில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் 650 பேமென்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்ட உள்ளன. தமிழக வட்டத்தில் தபால்துறை பணப் பரிவர்த்தனை வங்கி (பேமென்ட் பேங்க்) கிளைகளின் தொடக்க விழா சென்னையில் செப்டம்பர் மாதம் முதல் தேதி நடைபெற்றது.
நம் நாட்டில் 1,55,000 தபால் நிலையங்கள் உள்ளன. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்களைக் கொண்ட நாடு என்ற பெருமை நமது இந்தியாவுக்கு உண்டு. அந்த வகையில், 
அஞ்சலக வங்கி மூலம் பணப் பரிவர்த்தனை வங்கிச் சேவையை அளிப்பதில் இந்தியா முதலிடத்தை அடைய முடியும். கடந்த காலங்களில் நம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு கொண்ட அரசுத்துறை தபால் துறைதான்.
ஆனால், அண்மைக் காலங்களில் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக தபால்காரர்களின் பணி முடிந்துவிடும் என்று பலரும் நினைத்த நிலையில், தபால் துறையுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு விட்டுப் போகாது என்பதற்கு பேமென்ட் பேங்க் உதயமாகியிருப்பது நல்ல சகுனம்.
பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா' திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.
இந்த அருமையான திட்டம் உருவானது எப்படி? கிராமப்புற மக்களுக்கு முழு அளவில் வங்கிச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 2012-ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வங்கிச் சட்டத் திருத்த மசோதா மூலம் புதிய தனியார் வங்கிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி இரண்டு வகையான வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. முதலாவது, எல்லாவகை வங்கிச் சேவைகளையும் வழங்கும் வங்கி லைசென்ஸ் (Universal Bank Licence). . இரண்டாவது, குறிப்பிட்ட சேவைகள் மட்டும் வழங்கும் சிறிய வங்கிகளுக்கான அனுமதி 
(Differentiated Bank Licence)  இதன் அடிப்படையில் பேமென்ட்ஸ் வங்கிகள் மற்றும் சிறிய வங்கிகள்(Small Banks)என்கிற இரு வெவ்வேறு விதமான வங்கிகள் அண்மைக்காலமாக செயல்பட்டு வருகின்றன.
உதாரணமாக, ஒரு பேமென்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியாது. ஆனால், அவர்களிடமிருந்து வைப்பு (டெபாசிட்') தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. சேமிப்புக் கணக்கில் அல்லது வைப்புக் கணக்கில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பேமென்ட் வங்கிகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கும், அவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதற்கும் இவ்வித வங்கிகள் ஊக்கம் அளிக்கும். முக்கியமாக, ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்கு பணம் அனுப்பி வைப்பதற்கு பேமெண்ட் வங்கிகள் எளிய முறையை உருவாக்கித் தருகிறது. 
ஒரு மாநில தொழிலாளர்கள் இன்னொரு மாநில நகரங்களில் அல்லது சிற்றூர்களில் பணிபுரிவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. அவர்களைப் போன்ற அதிக கல்வியறிவு இல்லாத தொழிலாளர்கள் வணிக வங்கிகளுக்குப் போவதைவிட பேமெண்ட் பேங்க் மூலம் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதற்கு நல்ல வாய்ப்பு அமையும். பேமெண்ட் பேங்குகளுக்கு, இப்படிப் பணம் அனுப்புவதால் கிடைக்கும் கட்டணம் தவிர, வேறு ஏதேனும் வருவாய் உண்டா என்றால் நிச்சயமாக உண்டு.
கிராமங்களில், வங்கிக் கிளை தொடங்குவதற்கு பதில், பேங்கில் கரெஸ்பாண்ட்டென்ட்(Banking Correspondent) ) என்ற வங்கிப் பிரதிநிதி ஒரு சிறிய கிளை செய்யும் பணியான பணம் கொடுத்தல் அல்லது பணம் டெபாசிட் செய்தல் போன்ற சேவைகளை வங்கியின் சார்பில் செய்கிறார்.
இந்த வகை பணியை, பேமெண்ட் பேங்க் வேறு வணிக வங்கிகளின் சார்பில் செய்து வருவாய் ஈட்டலாம்.
சென்ற ஆண்டு 11 அமைப்புகளுக்கு பேமெண்ட் பேங்க் திறப்பதற்கு பாரத ரிசர்வ் வங்கி உரிமம் (லைசென்ஸ்) வழங்கியது. இவற்றில் நான்கு அமைப்புகள் மட்டுமே பேமென்ட் வங்கிகளை நிறுவியுள்ளன. ஏர்டெல் பேமென்ட் பேங்க்', இந்திய தபால் பேமென்ட் பேங்க்', பேடிஎம் பேமென்ட் பேங்க்' மற்றும் பினோ பேமென்ட் பேங்க்' ஆகியவையே அவை.
மேற்கூறிய நான்கு பேமென்ட் வங்கிகளை கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். இந்தியாவில் குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் செல்லிடப்பேசி (மொபைல் போன்) பயன்பாடு மிக வேகமாகவும், அதிக அளவிலும் பரவி விட்டது. அதனால் அதில் அனுபவம் கொண்ட ஏர்டெல்' போன்ற நிறுவனங்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்தது.
அதே போல், அஞ்சல் துறையும் ஊரகப் பகுதிகளிலும் கிராமங்களிலும் கிளை அலுவலகங்களை நெடுங்காலமாக பெற்று சிறந்த அனுபவம் வாய்ந்த அமைப்பாகத் திகழ்கிறது. எனவே, அஞ்சல் அலுவலகத்துக்கு பேமென்ட் பேங்க் அமைப்ப தற்கு எல்லாத் தகுதிகளும் உண்டு என் பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
பேமென்ட் பேங்க் மூலதனம் ரூ.100 கோடி மட்டுமே. சாதாரணமாக, ஒரு தனியார் வங்கி அமைக்க குறைந்த பட்சம் ரூ.500 கோடி மூலதனம் தேவை. அந்த விதிமுறை பேமெண்ட் பேங்க்குக்கும் சிறிய வங்கிக்கும் தளர்த்தப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலக வங்கி போன்ற பேமென்ட் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்க முடியாது. இந்நிலையில் அந்த வங்கிகள் திரட்டக் கூடிய டெபாசிட் தொகையை என்ன செய்வது? அஞ்சல் அலுவலக வங்கிகளுக்கு வருவாய் கிடைக்க என்ன வழி? இந்திய அஞ்சல் பேமென்ட் பேங்க் ஆனாலும் சரி, இதர பேமென்ட் வங்கிகள் ஆனாலும் சரி, அவை திரட்டும் டெபாசிட் தொகையில் 75 சதவீதத்தை அரசு பாண்டுகளிலும் அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பது பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறை. அந்த வகையில் பாதுகாப்பு , மிதமான வருவாய் ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் உள்ளது. மீதமுள்ள 25 சதவீத டெபாசிட் தொகையை வணிக வங்கிகளில் வைப்பு நிதி ஆகப் போடலாம். எதிர்பாராத அவசர நிர்வாகச் செலவுகளுக்கு அதிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பேமென்ட் வங்கிகளுக்கு வணிக ரீதியாக இடர்ப்பாடு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடும் என்னும் அச்சத்தில்தான் அஞ்சலக வங்கிகள் உள்ளிட்ட பேமென்ட் வங்கிகள் கடன் கொடுப்பதற்கு அனுமதிப்படவில்லை. இதனால் லாபம் மிதமாக இருந்தாலும் எந்த நேரத்திலும் ஆபத்து நேர வழியில்லை. அதே நேரம் அஞ்சல் அலுவலகங்களில் காலங்காலமாக சேர்ந்துள்ள சேமிப்புக் கணக்குகளை இனி பேமென்ட் வங்கி கையாளும் என்பதால், அஞ்சலக பேமென்ட் வங்கியின் லாபத்துக்கு வாய்ப்பு ஏற்படக் கூடும். தற்போது அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் ரூ.85,000 கோடி வரை பணம் சேர்ந்துள்ளது.
சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட பேமென்ட் வங்கிகளான ஏர்டெல்', பேடிஎம்' மற்றும் பினோ' ஆகியவை இதுவரை லாபம் ஈட்டியதாகத் தெரியவில்லை. எனினும் அஞ்சலக பேமென்ட் பேங்க்குக்கு வேறு எந்த அமைப்புக்கும் இல்லாத வாய்ப்பு இருக்கிறது. அஞ்சல் அலுவலகத்தின் 1,55,000 கிளைகள் புதிய அஞ்சல் பேமென்ட் பேங்குடன் இணைக்கப்பட உள்ளன. டிஜிட்டல் வசதியும் செய்து கொடுக்கப்பட உள்ளதால் குக்கிராமங்களுக்கும் அஞ்சலக வங்கியின் சேவை போய்ச் சேரும் என்று நம்பலாம்.
அஞ்சலக பேமென்ட் வங்கி வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்குக்கு 4 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது என்பதால், பேமென்ட் வங்கியின் நிதிச்சுமை அதிகரித்தாலும், வாடிக்கையாளர்கள் புதிய பேமென்ட் வங்கிச் சேவையைத்தான் தேர்வு செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. அத்துடன், புதிய வங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மக்களாக, பின்தங்கிய மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான வங்கிச் சேவையை அவர்களின் வீடுகளுக்கே சென்று தபால்காரர்கள் வழங்குவார்கள். வரும் டிசம்பருக்குள் தமிழக தபால் நிலையங்களில் பணப்பரிமாற்ற வங்கிச் சேவை கொண்டு வரப்பட உள்ளது.
பணப் பரிமாற்ற வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் எந்த இடத்திலும் விரைவு ரகசிய குறியீடு (கியூ.ஆர்') அட்டை மூலமாகவும் சேவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பலன்கள் பயனாளிகளுக்கு சென்றடையும் என்பதே அஞ்சலக பேமென்ட் வங்கிகளின் பெரும் பலமாகவும் சாதனையாகவும் அமையும். ஏழைகள், நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என எளிய மக்கள் பல தரப்பினருக்கும் பல நூறு கோடி ரூபாய் நிவாரண நிதி ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இந்த நிதியை அஞ்சல் பேமென்ட் வங்கி மூலமாக அவர்களுக்கு நேரடியாக கிடைக்கச் செய்தாலே அஞ்சலக பேமென்ட் வங்கியின் உன்னத நோக்கம் நிறைவேறிவிடும். 
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருத்தல் வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு அஞ்சலக பேமென்ட் வங்கி ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com