சிறப்புக் கட்டுரைகள்

‘ஆண்மை விருத்தி’ நம்பிக்கையால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் கடல் அட்டைகள்! உண்மை நிலவரம் என்ன?

RKV

செய்தி 1

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற  200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். அவற்றின் மதிப்பு ரூ 5 லட்சம். ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகையான கடல்வாழ் உயிரினம் கடல் அட்டை. இவற்றை பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மேலும் அத்துமீறிப் பிடித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடல் அட்டை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி 2

ஆண்மை அதிகரிப்பு வதந்தியால் கடத்தப்படும் கடல் அட்டைகள்... தமிழக கடல் பகுதிகளில் இருந்து கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த ஓரிரு மாதங்களில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6,000 கிலோ கடல் அட்டைகள் கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆன்மையை அதிகரிக்கும் மருத்துவ குணம் இவற்றில் இருப்பதாக மக்களிடையே நம்பிக்கை நிலவுவதால் இவை பெரும்பாலும் அயல்நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. இந்தியாவில் கடல் அட்டை உட்பட 53 வகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க தடை உள்ளது. ஆயினும் ஆண்மை அதிகரிப்பு நம்பிக்கையால் கடல் அட்டைகளுக்கான தேவை அதிகரித்து அவற்றைக் கடத்தும் தொழில் முழு வீச்சில் நடந்து வருவது வேதனை!

கடல் அட்டைகளைப் பற்றி வனத்துறை அதிகாரியான சதீஸ் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...

இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிப்பதற்குத் தடை ஏன்?

கடல்சார் உயிரியலில் ‘செடிமெண்ட் ஃபில்ட்டரிங் அண்ட் நியூட்ரியண்ட் ரீசைக்கிளிங்’ என்று சொல்வார்கள். அதாவது கடலிலுள்ள நியூட்ரியன்ட்களை(ஊட்டச்சத்துகளை) ரீசைக்கிள் செய்வதற்கு கடல் அட்டைகள் பயன்படுகின்றன. கடலில் இருக்கக் கூடிய கழிவுப் பகுதிகளை கடல் அட்டைகள் உணவாகக் கொள்கின்றன. அதனால் தான் கடலின் அடிமட்டப் பகுதிகளில் சுத்தம் பேணப்படுகிறது. கடலின் அடிப்பகுதியைக் கலக்கி அங்கிருக்கும் கழிவுகளை கடல் அட்டைகள் உண்பதால் இவற்றைச் சார்ந்து ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பை இவை வழங்குகின்றன. அதுமட்டுமல்ல கடல் அட்டைகள் வெளியேற்றும் கழிவுகளில் காரத்தன்மை அதிகமிருப்பதாக கடல்சார் அறிவியல்துறை பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். கடல் அட்டைகளின் கழிவில் இருக்கும் காரத்தன்மையானது உலக வெப்பமயமாதல் காரணமாக கடல்நீரில் இயற்கையாக நிலவும் அமிலத்தன்மை ஏற்றத்தை கட்டுப்படுத்த உதவுவதாக கடல்வாழ் உயிரினங்கள் சார்பான அறிவியல் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. கடல்நீரின் அமிலத்தன்மை கட்டுப்படுத்தப்படா விட்டால் ஆழ்கடலில் வளரக்கூடிய பவளப்பாறைகளின் வளர்ச்சியை அவை பாதிக்கும். அந்நிலை ஏற்படாமல் தவிர்க்க இந்த கடல் அட்டைகளின் கழிவுகள் உதவுகின்றன. அது மட்டுமல்லாமல் கடல் அட்டைகளைச் சார்ந்து ஏராளமான கடல் வாழ் நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. கடலில், கடல் அட்டைகளின் சதவிகிதம் குறையும் போது இந்த நுண்ணுயிரிகள் அனைத்தும் அடுத்தபடியாக மீன்களைத்தான் உணவாகக் கொள்ளத் தொடங்கும். இதனால் மீன்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். கடல் அட்டைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கினால் அதன் அடுத்த கட்ட விளைவாக மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். கடல் அட்டைகள் ஆண்மையைத் தூண்டும் என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும், அந்த நோக்கத்தில் கடல் அட்டைகளை சூப் வைத்து சாப்பிடுவது பல நாடுகளில் இன்றும் வழக்கமாக இருப்பது உண்மை தான். ஆனால், இந்தியாவில் கடல் அட்டைகளைப் பிடிப்பது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்ட்டிருக்கிறது. பல வெளிநாடுகளில் அப்படியோர் தடை இல்லை என்பதால் அவர்கள் கடல் அட்டையை உணவாக உட்கொள்வதில் அவர்களுக்கு பிரச்னை இருப்பதில்லை. ஆனால், இந்தியாவில் இதற்கு தடை உண்டு. மீனவர்கள் அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

VIDEO CONTENT Courtesy: BBC NEWS TAMIL

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT