கையறு நிலையில் தமிழகம்!

மேக்கேதாட்டில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளுக்காக கர்நாடக மாநிலத்திற்கும், அதற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய நீர் வளத்துறைக்கும் தமிழக சட்டப்பேரவை

மேக்கேதாட்டில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளுக்காக கர்நாடக மாநிலத்திற்கும், அதற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய நீர் வளத்துறைக்கும் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தமிழகத்திலுள்ளஅரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்னையில் ஒருங்கினைந்து குரல் கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. 
கர்நாடக மாநிலத்தில் சுமார் 150 மீட்டர் அகலத்தில் பாய்ந்து வரும் காவிரி, மேக்கேதாட்டு பகுதியை அடையும்போது அங்கே உள்ள பாறைகளின் ஊடாக சுமார் 10 மீட்டர் இடைவெளியில் பாய்ந்து வெளிவருகிறது. ஆடு தாண்டும் அளவில் இருக்கும் இந்த பாறைகள்தான் கன்னடத்தில் மேக்கேதாட்டு என்று அழைக்கப்படுகிறது. மேக்கே என்றால் ஆடு, தாட்டு என்றால் தாண்டு என்று பொருள். இந்த ஆடு தாண்டும் பாறையை அடிப்படையாகக் கொண்டு குறுகிய இடைவெளியில் காவிரி செல்லும் பகுதியில் அணை அமைக்க நீண்ட நாள்களாகவே கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. 
இயற்கை அதிக அளவில் மழை தந்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் தேக்கிவைக்க முடியாமல் தண்ணீரைத் திறந்துவிட்டாக வேண்டும். அப்படி இரு அணைகளும் நிரம்பி வழிந்ததால்தான் இப்போது காவிரியில் தமிழகம் கேட்காமலேயே தண்ணீர் வருகிறது. அதையும் பொறுக்கமாட்டாமல், மேக்கேதாட்டில் அணை கட்டி அதைத் தேக்கி வைக்க விரும்புகிறது கர்நாடகம். 
ஏற்கெனவே காவிரியில் ஐந்து இடங்களிலிருந்து சுமார் 10 டிஎம்சி தண்ணீர் பெங்களூரு நகர பயன்பாட்டுக்காக எடுக்கப்படுகிறது. இப்போது மேக்கேதாட்டில் அணை கட்டுவதன் மூலம் கர்நாடக அரசு மேலும் தண்ணீரை திருப்பிவிடும் என்றால் மழை நன்றாகப் பெய்தாலும்கூட தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு மேலும் குறையும். தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நிர்ணயித்த அளவுக்கு மேலாக நன்றாக மழை பெய்தாலும்கூட, தண்ணீர் சென்றுவிடக் கூடாது என்பதுதான் கர்நாடக அரசின் நோக்கம் போல தெரிகிறது.
மேக்கே தாட்டில் புதிய அணை கட்டும் திட்டம் இன்று - நேற்று தொடங்கியது அல்ல. கடந்த 2014 முதலே கர்நாடக அரசு இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2014 டிசம்பர் மாதமும், 2015 மார்ச் மாதமும் இப்போது போலவே தமிழக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும்கூட, மேக்கேதாட்டில் 67 டிஎம்சி அளவுக்கான நீரை தேக்கி வைத்துக்கொள்ள புதிய அணையை கட்டும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் வளக் குழுமம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதுதான் வியப்பையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
கீழ் படுகை மாநிலங்களின் முன்னனுமதி பெறாமல் கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது. காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் விரோதமான கர்நாடக அரசின் இந்த முயற்சியை மத்திய நீர்வளத் துறை எப்படி, எதனால், எதற்காக அனுமதிக்கிறது என்று புரியவில்லை. 
கடந்த 2015 மார்ச் மாதம் மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்த திட்ட அறிக்கை தயாரிக்க நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த அணை மூலம் நீர் மின் உற்பத்தி செய்யவும், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அப்போது தெரிவிக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசும்போது அன்றைய முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநிலத்தில் கனகபுரா வட்டத்தில் அமைந்துள்ள மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்து தமிழக விவசாயிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தார். இப்போது மீண்டும் இதே பிரச்னையைக் கர்நாடகம் முன்னெடுத்திருக்கிறது. 
இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஒரு மாநிலம் விரும்பினால், அந்த நதியால் பயனடையும் அண்டை மாநிலத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு. இதற்கு முன்னர் காவிரி நடுவர்மன்றம் கர்நாடக அரசு காவிரி பாசனப் பகுதிகளில் தனது சாகுபடிப் பரப்பை அதிகரிக்கக்கூடாது என்றும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இப்படி காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றமும், அதற்கு முன் நடுவர் மன்றமும் தெளிவாகத் தீர்ப்புகள் அளித்தும்கூட, கர்நாடகம் மீண்டும் மீண்டும் தமிழகத்துக்குப் பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும், அதை நடுவண் அரசு மெளனமாக ஆதரிப்பதும் வேதனை தருவதாக இருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மேக்கேதாட்டு அணை பிரச்னை குறித்து திருச்சியில் நடந்த திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் போராட்டத்தில், பிரிவினை குறித்தான கருத்துகள் வெளியிடப்பட்டது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படும்போது ஏற்படும் கையறு நிலை அதுபோன்ற சிந்தனைகளைத் தூண்டுவதில் வியப்பொன்றுமில்லை. காவிரியில் கர்நாடகம், முல்லைப் பெரியாற்றில் கேரளம், பாலாற்றில் ஆந்திரம் என்று தமிழகத்தின் உரிமை தொடர்ந்து வஞ்சிக்கப்படும்போது நடுவண் அரசு மெளனம் காக்குமேயானால், கூட்டாட்சித் தத்துவம் என்பது கேலிக்கூத்தாகிவிடும். அடிப்படைப் பிரச்னைகளில் அரசியல் பேசக் கூடாது, அரசமைப்புச் சட்டம்தான் பேச வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com