அச்சம் தரும் ஆகாயப் பயணம்!

கடந்த வியாழக்கிழமை மும்பையிலிருந்து ஜெய்ப்பூருக்குக் கிளம்பியது ஜெட் ஏர்வேஸின் ஃப்ளைட் 697 விமானம்.

கடந்த வியாழக்கிழமை மும்பையிலிருந்து ஜெய்ப்பூருக்குக் கிளம்பியது ஜெட் ஏர்வேஸின் ஃப்ளைட் 697 விமானம். 171 பயணிகளுடன் கிளம்பிய அந்த விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், சுமார் 10,000 அடி உயரத்தில் அபாய ஒலி கேட்கத் தொடங்கியது. அதற்குள் பயணிகள் பலருக்கும் தலைசுற்றல், காது வலி, மூக்கிலிருந்தும், காதுகளிலிருந்தும் ரத்தம் ஒழுகுதல் என்று பிரச்னைகள் எழத்தொடங்கின. ஐந்து பயணிகள் திடீரென்று தங்களது காதுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் கொட்டத் தொடங்கியதைப் பார்த்து பயந்துபோய் அலறத் தொடங்கினார்கள். பயணிகளின் ஓலமும் அபாய ஒலியும் விமான ஓட்டிகளைத் திடுக்கிட வைத்தன.
 பிரச்னை அதிகரித்த பிறகுதான், பயணிகள் பகுதியின் குளிர்சாதனக் கருவிகளை இயக்க மறந்துவிட்டது விமான ஓட்டிகளுக்குத் தெரிந்தது. அதனால், பயணிகள் பகுதியில் அழுத்தம் அதிகரித்து அது பயணிகளை பாதித்திருக்கிறது என்பது தெரிந்தபோது, பயந்துபோய் விமானத்தை அவசர அவசரமாக மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கே திருப்பி இருக்கிறார்கள். பயணிகள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
 கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி, நியூயார்க்கிலிருந்து 370 பயணிகளுடன் தில்லிக்குக் கிளம்பியது ஏர் இந்தியா விமானம். விமானத்தளத்திலிருந்து கிளம்பிப் பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் பல்வேறு இயந்திரங்கள் இயங்காதது கண்டுபிடிக்கப்பட்டு, அவசர அவசரமாக நியூஜெர்சி விமான நிலையத்தில் பாதுகாப்புடன் இறக்கப்பட்டது. நல்ல வேளையாக, பிரச்னை இல்லாமல் ஓடுபாதையில் விமானம் இறங்கியது பயணிகள் செய்த புண்ணியம் என்றுதான் கூற வேண்டும். இதுபோன்று பறக்கும்போது ஏற்படும் இயந்திரக் கோளாறுகளால் இண்டிகோ, கோஏர் விமானங்களும் சமீப காலங்களில் பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கின்றன.
 விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விமானங்களும், விமான நிலையங்களும், விமானப் பயணிகளும் அதிகரித்திருக்கும் அளவுக்கு விமானத்தின் பாதுகாப்பு அம்சங்களும், விமான நிலையங்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கவில்லை. அதனால்தான், பல்வேறு பிரச்னைகளையும், கோளாறுகளையும் விமானங்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றன.
 கடந்த ஓராண்டில், வானிலும் சரி, தரையிறங்கும் நேரத்திலும் சரி, விமானங்கள் ஒன்றோடொன்று மோதுகிற அளவில் நெருங்கிய சம்பவங்கள் ஏராளம் உண்டு. வானில் பறக்கத் தொடங்கிய பிறகு இயந்திரக் கோளாறு ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்டது எப்படி என்பதையும், அடிப்படைப் பணியான விமானத்தின் குளிர்சாதன இயந்திரங்களை ஜெட் ஏர்வேஸ் விமானிகள் முடுக்கிவிடாமல் இருந்தது ஏன் என்பதையும் நினைத்துப் பார்க்கவோ, அதற்குக் காரணம் தேடவோ முடியவில்லை. விமானப் பணியாளர்களின் கவனக் குறைவுக்குப் பணிச்சுமை காரணமான சோர்வு, மெத்தனப் போக்கு, போதுமான பயிற்சி இல்லாமை உள்ளிட்டவை வெளிப்படையான காரணங்கள்.
 இந்தியாவைப் பொருத்தவரை, விமானப் பயணிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மிக அதிகமான பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வியாபாரப் போட்டியில் விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.
 அதிக விமானங்களை இயக்குவது, போதுமான பயிற்சி இல்லாத விமானப் பணியாளர்களை அதிக அளவில் வேலையில் சேர்த்துக் கொள்வது, விமான நிலையங்களில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே தங்கள் விமானம் தரையில் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது ஆகியவை விமான சேவை நிறுவனங்களின் முன்னுரிமை ஆகிவிட்டன.
 விமான நிலையங்களில் விமானங்கள் நிறுத்தப்படும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இந்திய விமான நிலைய ஆணையத்திற்குக் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதால், தரையிறங்கிய விமானங்களை எவ்வளவு விரைவில் மீண்டும் பறப்பதற்குத் தயாராக்குவது என்பதில்தான் அவை கவனம் செலுத்துகின்றனவே தவிர, விமானத்தின் பாதுகாப்பிலோ, இயந்திரங்களின் முறையான செயல்பாடுகளிலோ முழுமையான கவனத்தைச் செலுத்துவதில்லை. அதன் விளைவுதான் பறக்கும்போது ஏற்படும் இயந்திரக் கோளாறுகள்.
 விமான சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும், தேர்ச்சி பெற்றவர்களைப் பணியிலமர்த்துவதிலும் கவனம் செலுத்தாமல், செலவுகளைக் குறைப்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. தங்களது நிறுவனங்களின் லாபத்தை முன்னிலைப்படுத்தி, இதுபோன்ற அடிப்படை அம்சங்களை வளர்ச்சிக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதும் போக்குதான் அதற்குக் காரணம்.
 விமானப் போக்குவரத்து அமைச்சகமும், விமானப் போக்குவரத்து ஆணையரும் இதுபோன்ற செயல்பாடுகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தி, தவறு செய்யும் விமானப் பணியாளர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். முறையான பயிற்சி இல்லாமை, பாதுகாப்புக் குறைபாடு ஆகியவற்றுக்கு விமான சேவை நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
 விசாரணையும் நடவடிக்கையும் கால வரம்புடன் நடத்தப்பட வேண்டும். விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட்டு, அதுகுறித்துப் பொதுவெளியில் விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், இந்திய விமானத் துறையில் நடைபெறும் தவறுகள் விசாரிக்கப்படுகின்றனவே தவிர, எந்தவொரு விபத்தின் விசாரணை அறிக்கையும் பொதுவெளியில் வெளியிடப்படுவதில்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா என்பதும் வெளியில் தெரிவதில்லை. குறைந்த செலவில் விமானப் பயணம் என்பதற்காக பாதுகாப்பில்லாத விமானப் பயணம் ஏற்புடையதல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com