சென்னை: பத்தாம் வகுப்பு படித்து முடித்து மேனிலை வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு நாளை நடக்கிறது. தமிழகத்தில் இத்தேர்வினை 1 லட்சத்து 59,030 தேர்வர்கள் 505 மையங்களில் எழுதவுள்ளனர்.
அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் ஒவ்வோராண்டும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பத்தாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி மேற்படிப்பு வரை தங்கு தடையின்றிக் கல்வியைத் தொடர வசதியாக மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.4) நடக்கிறது.
இதுகுறித்து அரசு தேர்வு துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு முதல் கட்ட தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.4) நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கு 505 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 9 முதல், 11 மணி வரை அறிவு திறன் தேர்வு (ஙஅப) நடக்கும். 11 முதல் 11.30 வரை இடைவேளை. அதன்பின், 11:30 முதல் பிற்பகல் 1:30 மணி வரை கல்வி திறன் தேர்வு (நஅப) நடக்கும். மாணவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மையங்களில் இருக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக (காலை 8 மணிக்கு) தேர்வு மையங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.