உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!

வளரிளம்பெண்கள் தங்களது வயதில் பழகும் உணவுமுறையும், உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களும்
உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!

ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை மழலைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி நிலையில் பெரும்பாலும் ஆண்குழந்தை, பெண்குழந்தை என்ற பாலியல் வேறுபாடு மட்டும்தான் காணப்படுகிறதே தவிர, மிகப்பெரிய அளவில் உடலியல் மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. இருபாலரும் சிறு குழந்தைகளாகவும், மழலைமொழி பேசும் மலர்களாகவும் மட்டுமே வளாக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து வரும் எட்டு முதல் பத்து ஆண்டுகள்தான் உடலளவிலும், மனதளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, அதற்குரிய பாதுகாப்பையும் வளர்ப்பு முறைகளையும் உணர்த்தி, ஆண் குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மழலைப் பருவத்தைத் தொடர்ந்துவரும் குழந்தைப் பருவமானது பெண் குழந்தையைப் பொருத்தவரை 2 முதல் 10 வருடங்களாகவும், ஆண்குழந்தைகளுக்கு 2 முதல் 12 வருடங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது' என்கிறார் உணவியல் நிபுணர், ப. வண்டார்குழலி இராஜசேகர்.
 

வளரிளம் பருவம்

குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் பின் வளரிளம் பருவம் என்பதாகும். 

வளரிளம்பருவம் என்பது பெரும்பாலும் "வாய்ப்புகளின் வயது' என்று அழகாகக் கூறப்படுகிறது. பெற்றோர்களால் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்டு, அதீத பொறுப்புடன் தங்கள் பருவவயது பிள்ளைகளுக்கு உறுதியான, தெளிவான, எதையும் ஆராய்ந்து பார்த்து பிரச்னைகளை எதிர்கொள்கின்ற பக்குவத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய காலம். இவ்வாறான செயல்பாடுகளே, வளரிளம் பருவ தலைமுறைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கிக் கொடுக்கவல்லது. 

வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று எப்போது கூறமுடியும்? ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், வயதிற்கேற்ற உடல் எடையும் உயரமும் கொண்டு, வளர்சிதை மாற்றங்கள், உடலியல் நிகழ்வுகள், இயன்முறை செயல்பாடுகள் ஆகியவை முறையாக உடலில் நிகழ்வதற்கான தகுதியும், ஆத்மார்த்தமான, உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஒருங்கே இணைந்திருக்கும்போதுதான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறமுடியும். 

மனித வளர்ச்சியில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி, தாய்மையடைந்து, பாலூட்டும் தாயென்ற நிலையை அடைவதற்கு முழுமையான உடல் தகுதியையும், மனப்பக்குவத்தையும், சேர்த்துக்கொடுக்கக்கூடிய வயதுதான் வளரிளம்பருவ வயது என்பதால், இந்த வயதில் ஒவ்வொரு பெண்ணும், பரிபூரண ஆரோக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு, ஊட்டம் நிறைந்த சரிவிகித உணவு மிக முக்கியமான ஒன்றாகும். 

வளரிளம் பருவத்திற்கான சரிவிகித உணவானது, அந்த வயதில் ஏற்படும் உடற்கூறு சார்ந்த மாற்றங்கள், உடலுறுப்பின் இயக்கங்கள், உயிர் வேதியியல் வினைகள், மனம் மற்றும் சமூகம் சாட்ந்த வளர்ச்சி, அந்த வயதிற்கேற்ற முதிர்ச்சியும், பக்குவமும் சரியான முறையில் நிகழ்வதற்கு முழுமுதலாக துணைபுரிகிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட சத்து அல்லது இரண்டு மூன்று சத்துக்கள் தொடர்ச்சியாக உடலுக்கு அளிக்கப்படவில்லை என்றால், இப்பருவப்பெண்ணின் உடலில் சுரக்கும் (IGF1) என்ற சராசரி வளாச்சிக்குரிய ஹார்மோனின் செயல்பாடு குறைவு ஏற்பட்டு வளர்ச்சியிலும் குறைபாடு ஏற்படுகிறது. 

தொடர்ச்சியான ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள்

  • திருமணத்திற்குப் பிறகு, இனப்பெருக்கம் அல்லது பாலுணர்வு சார்ந்த செயல்பாடுகளில் குறைபாடு.
  • பெண் பூப்பெய்தும் வயது நீடித்தல் அல்லது பூப்பெய்தாமலே இருப்பது
  • பருவம் அடைந்த பிறகு, சீரான மாதவிடாய் இல்லாதிருத்தல்
  • வயதிற்கேற்ற சரியான மார்பக வளர்ச்சியின்மை
  • எலும்புகள் வலுவிழந்து, போதிய உயரமின்மை
  • ஒழுங்கற்ற உடல் அமைப்பும், இடுப்புப் பகுதியும் மன அழுத்தத்தையும் மனக்குறையையும் ஏற்படுத்திவிடும்
  • தோல் பொலிவிழந்தும், காயங்களுடனும் காணப்படுதல்
  • அடிக்கடி தலைவலி மற்றும் பசியின்மை ஏற்படுதல்
  • எந்த வேலையிலும் சோர்வடைதல், எதிலும் விருப்பமில்லாமல் இருத்தல்
  • படிப்பில் கவனமின்மை, குறைவான உட்கிரகிக்கும் திறன், கற்றல் குறைபாடுகள் 
  • அன்றாட நடைமுறைப் பழக்க வழக்கங்களில் குறைபாடுகள் ஒவ்வொன்றாக தொடங்குதல்

மேற்கூறிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பொதுவானவையாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், சத்துணவு சார்ந்த ஆரோக்கியக் குறைபாடுகள் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, உடலும் மனமும் சரிவர செயல்பட முடியாமல் அதிகப்படியான பிரச்சினைகளை வளரிளம்பருவ வயதில் ஏற்படுத்துகின்றன. 

ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்கள்

பருவ காலத்தில், ஆண் பிள்ளைகள் எப்பொழுதும் உறுதியான, எடுப்பான உடற்கட்டுடன் இருப்பதற்கும், பெண்பிள்ளைகள் அழகுடன், தோற்றப்பொலிவுடன் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்தந்த பாலினத்திற்குரிய இயல்பான வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும்போதுதான் மனக்குழப்பத்திற்குள்ளாகி எதிலும் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இவற்றிற்கு, ஊட்டச்சத்து குறைபாடும், அளவிற்கு அதிகமான உணவுப்பழக்கமும் காரணமாகின்றன. அவற்றை சரி செய்துவிட்டால், ஆரோக்கியம் சீராகிவிடும் என்பதை உறுதியாக எண்ணவேண்டும். இந்த வகையான குறைபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 

பசியற்ற உளநோய் (ANOREXIA NERVOSA)

இந்நிலை குறிப்பாக முன்பருவத்திலிருந்து பின்பருவத்திற்கு முன்புவரை (13 முதல் 16 வயது) அதிகமாகக் காணப்படுகிறது. சரியான உணவுகளை உண்ணாமல், பசியுடன் தனக்குத்தானே வருத்திக்கொண்டும், 85 சதவிகிதத்திற்கும் குறைவான உடல் எடையுடன், மெலிந்த தோற்றத்தில்ல் இருப்பார்கள். அவர்கள் தானாக முன்வந்து திருத்திக்கொள்ளாமலும், பெற்றோர்களால் சரிசெய்யப்படாமலும் விட்டுவிடும் தருணத்தில், உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும். பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய், கை கால்களில் பொலிவற்ற தன்மை, பூனை முடி (downy Hair) என்று கூறப்படும் வலுவிழந்த காவிநிற அல்லது சாம்பல் நிற முடிவளர்தல் ஆகியவை ஏற்பட்டு அழகற்றதன்மை நிரந்தரமாகிவிடும். சிறிதளவு உணவே உண்டாலும், குமட்டல், வயிற்று உப்புசம், ஏப்பம், மலச்சிக்கல் போன்ற சிறுசிறு உபாதைகளுக்கு ஆளாகிவிடுவார்கள். 

பசியற்ற உளநோய் உள்ள வளரிளம் பருவத்தினரின் உணவுமுறை மற்றும் மனப்பாங்கு

  • பசியை மறந்தும், மறைத்தும், குறைவான உணவான இருந்தாலும், அதிக நேர இடைவெளியில் உண்பார்கள். 
  • உணவு, அதிலுள்ள சத்துக்கள், பயன்கள் ஆகியவற்றைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பதுபோல் பாவனை செய்வார்கள்.
  • குறிப்பாக, கொழுப்பு உணவுகள், வாசனைப்பொருட்கள், அசைவம், பால் மற்றும் அவை சார்ந்த உணவுகளைத் தவிர்த்துவிடுவார்கள்.
  • சத்துக்கள் குறைந்த உணவானாலும், ஆடம்பரத்திற்காக உண்ணும் உணவும், சரியான சேர்க்கை இல்லாத உணவுகளுமே சரியான உணவுகள் என்று தர்க்கம் பேசுவார்கள்.
  • உணவு பரிமாறப்பட்டால், உண்ண வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவே பொது விழாக்களையும், குடும்ப விழாக்களையும் தவிர்த்துவிடுவார்கள்.
  • அதிக கோபத்தை வெளிப்படுத்தாமல் எதிலும் மிகச்சரியாக இருப்பதுபோல் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
  • மனச்சோர்வுடனும், எதையோ இழந்ததுபோன்ற ஒரு மனநிலையிலும், தன்னைக் குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையுடனும் காணப்படுவார்கள்.
  • உண்ணவில்லை என்றாலும், உடல் குண்டாகி விட்டதாக எண்ணும் உள்ளுணர்வால், தேவையற்ற அச்சத்துடன் அவசியமில்லாத உணவுக்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற நினைப்பார்கள்.
  • எந்தவிதமான சமுதாய விழாக்களிலும், உறவினர்கள் மற்றும் பள்ளி அல்லது கல்லூரி விழாக்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளமாட்டார்கள். 

இயற்கையை மீறிய பெரும்பசி (Bulimia Nervosa)

குறுகிய நேரத்தில் அளவிற்கு அதிகமான உணவை உண்ணுவதால் ஏற்படும் செரிமானக்கோளாறும், அதனைத் தொடர்ந்து அதிக உணவால் உடல் எடை ஏறிவிடும் என்ற மன உளைச்சலில் உண்ட உணவை வாந்தியாக எடுத்துவிடும் நிலைக்கு என்று ஆங்கிலத்தில் பெயர். இதைச் சரியான பொருளில் கூறும்போது, இயற்கையை மீறிய பெரும் பசி என்றும் கொள்ளலாம். 

இயற்கையை மீறிய பெரும் பசி உள்ள வளரிளம்பருவத்தினரின் உணவுமுறை மற்றும் உளவியல் வெளிப்பாடுகள்

வாந்தி எடுக்கும் நிலையானது, தானாக தொண்டையில் கைவிட்டு வாந்தி எடுத்தல், வாந்தி வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டும், பிறரிடம் கூறிக்கொண்டும், அதே சிந்தைனையில், குமட்டலுடன் வாந்தி எடுத்தல் என்று வெவ்வேறு நிலைகளில் நிகழ்த்துவார்கள்.

உண்ட உணவானது எளிதில் செரித்து, மலம் வெளியேற வேண்டும் என்பதற்காக மலமிலக்கிகள் மற்றும் சிறுநீர் பிரியும் மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளையும் இந்தப் பருவ வயதினருக்கு ஏற்படும் புளிமியா நெர்வோஸா (Bulimia Nervosa) நிலையின் இயல்பாகும். 

தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளுதல், தன் உடலைப் பற்றிய முரண்பாடான கருத்து, புற அழகையோ அல்லது உடல் தகுதியையோ முக்கியமாகக் காண்பிக்கும் பணியை விரும்பும் நிலை ஏற்படுதல். குழந்தைப் பருவத்திலிருந்து, நடுத்தர வயதுப்பருவத்திற்கு மாறும்போது ஏற்படும் மன உளைச்சல், இயற்கையை மீறிய பெரும்பசி நிலையை மேலும் அதிகரிக்கிறது.

செயற்கையாக வாந்தி எடுக்கும் இந்நிலையால், அடிக்கடி உடல்எடையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. உடலில் உள்ள தாது உப்புக்களில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாகும் இதயம் மற்றும் சிறுநீரகம் சார்ந்த தொல்லைகளால் ஆரோக்கிய சீர்கேடு நாளமில்லாச் சுரப்பிகளில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படுதல், கண்ணில் உள்ள இரத்த நாளங்களில் பிளவுகள், நாட்பட்ட நீரிழப்பு, வயிற்றுப்புண் ஏற்படும் நிலை தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதால், உணவுக்குழாய், தொண்டை, வாய்ப்பகுதியில் புண் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படுதல்.

அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டும், மலம் கழித்துக்கொண்டும் இருப்பதால் ஏற்படும் உடல் நாற்றத்தால் அவர்களுக்கே அவர்கள்மேல் வெறுப்பும், மனஉளைச்சலும் உண்டாகிறது. 

ஊட்டச்சத்து சார்ந்த கல்வி

பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்தான் மிக அதிகமாக உணவு மற்றும் ஊட்டம் சார்ந்த புத்தகங்களை அதிகம் படிப்பவராக இருப்பார்கள். தறபோதைய தொழில்நுட்ப உலகில், இணையதளம் மற்றும் சமூக வளைத்தளங்களில் உலா வரும் உணவு தொடர்பான செய்திகளை அதிகம் படித்தும் பகிர்ந்தும், தங்களுடைய உடல்நிலையுடன் பொருத்திப் பார்க்கும் நிலை அதிகரித்திருப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகும். 

ஏனெனில், சுய மருத்துவம் எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோன்றுதான் நிலையற்ற, நம்பகத்தன்மையற்ற, முறையான அனுபவமிக்க உணவியல் வல்லுநர் மற்றும் மருத்துவரிடமிருந்து நேரடியாக கிடைக்கப்பெறாத ஆலோசனைகளும் ஆபத்தானவையே. அப்படியான விஷயங்கள் அவர்களுடைய உடல்நிலையை மேலும் சிக்கலாகிவிடும். 

வளரிளம்பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு நோயுள்ளவர்களுக்கு, குழு ஆலோசனையைவிட தனிநபர் ஆலோசனை மிகச் சிறந்த வழியாகும். ஒவ்வொரு கட்ட ஆலோசனையின்போதும், சிறிது சிறிதாக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான நன்மையளிக்கும் செய்திகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் எடுத்துரைக்கவேண்டும். 

வளரிளம்பருவப் பெண்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் எந்த அளவில் தேவை என்பதையும் அவற்றைப் பெறுவதற்கான உணவுமுறைகளும் மிகவும் முக்கியம்.

வளரிளம்பெண்கள் தங்களது வயதில் பழகும் உணவுமுறையும், உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களும் இந்த வயதில் மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து வரும் திருமணவாழ்க்கைக்கும், பேறு காலம் மற்றும் குழந்தைக்குப் பாலூட்டும் காலத்திலும் அப்பெண்ணின் முழு ஆரோக்கியத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. பருவ வயது பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளின் அளவீடுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (INDIAN COUNDIL OF MEDICAL RESEARCH) தெளிவாக நிர்ணயித்துள்ளது. இதுவே இன்றளவும் ஊட்டச்சத்து வல்லுநர்களாலும், மருத்துவர்களாலும், வளரிளம்பெண்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய நலவழித்துறை அலுவலர்களாலும் பின்பற்றப்பட்டுவருகிறது. அது மட்டுமல்லாமல், முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட உணவியல் சார்ந்த ஆய்வறிக்கைகளை, ஊட்டச்சத்துகளால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதிக அல்லது குறைவான ஊட்டச்சத்தினால் ஏற்படும் விளைவுகள் என்று இரு கோணங்களில் ஆராய்ந்துள்ளார்கள். அவற்றுள், பரிந்துரைக்கப்பட்ட உணவு அளவுகளே ( RECOMMENDED DEITARY  ALLOWANCES) வளரிளம்பருவ வயதினருக்கும் ஏற்றதாக இருக்கிறது. 
 

ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்

பொதுவாக, ஊட்டச்சத்துக்களை கலோரி, கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு உள்ளடக்கிய பெரும் சத்துக்கள் என்றும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உள்ளடக்கிய நுண்சத்துக்கள் எனவும் இருவகைப்படுத்தலாம். இந்த இரண்டு வகைகளுமே வளரிளம் பருவப்பெண்களின் வளர்ச்சிக்கும் முழுமையான ஆரோக்கியத்திற்கும் காரணிகளாக இருக்கின்றன.


ஆற்றல் (கலோரி)

வளரிளம் பருவப் பெண்களுக்குத் தேவையான ஆற்றலானது, இவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவும், அவர்களின் அன்றாட வேலைகளுக்கு உதவிடவும் அவசியமாகிறது. பருவ வயதில் தேவையான ஆற்றலில் குறைபாடு ஏற்படும்போது, அடுத்தகட்டமான நடுத்தரவயது பெண்ணாக வளரும்போதும், திருமணம் முடிந்து, பேறுகாலத்தில் நுழையும்போதும் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது. 13 வயது பெண் 44.6 கிலோ எடையும், 1.51 மீட்டர் உயரமும், மிதமான பணியிலும் இருக்கிறாள் என்றால், 1617 கிலோ கலோரி ஆற்றல் அவள் உண்ணும் உணவிலிருந்து பெறப்பட வேண்டும். அதுவே, 16 முதல் 18 வயது பெண்ணென்றால், 2060 கிலோ கலோரிகள் தேவைப்படுகின்றன. அப்பெண்ணின் வேலை பளுவிற்கு ஏற்றவாறு ஆற்றலின் தேவையும் மாறுபடுகிறது. தானியங்களும், பருப்புகளும் உணவில் முறையாக சேரும்போது, ஆற்றலின் தேவை பூர்த்தியாகிறது.

புரதம்

புரதத்திற்கான தேவை, இந்தப் பருவவயதில் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒன்பது வயதுவரை ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான இருக்கும் புரதத்தின் தேவை, 10 வயதிலிருந்து வளரிளம்பருவம் முழுவதும் வேறுபடுகிறது. இருப்பினும், 10 முதல் 12 வயது வரை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாகி பின்பு 12 வயது முதல் 18 வயது வரையிலான காலத்தில், பெண்களின் புரதத்தேவை ஆண்களைவிட சற்றே குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முறையாக பார்க்கும்போது, 13 முதல் 15 வயது பெண்களுக்கு 65 கிராம் புரதமும், 12 வயது முதல் 18 வயது பெண்களுக்கு 63 கிராம் புரதமும் தேவை. அப்போதுதான் அவர்களின் பூப்பெய்தும் காலத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சிக்கும், ஹார்மோன்களின் முறையான செயல்பாட்டிற்கும் பயனளிப்பதாக இருக்கும். பால், முட்டை, மீன் உணவுகளுடன் பருப்பு வகைகளும் புரதத்தின் தேவையை முழுமையாக பூர்த்திசெய்கின்றன. 

கொழுப்புச்சத்து

பருவ வயது பெண்களுக்கு (13 முதல் 18 வயது வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ள கொழுப்புச் சத்தின் அளவு 22 மி.கிராமாகும். இந்த கொழுப்புச்சத்தானது அவர்களது வேலைப்பளு அதிகரிக்கும்போதும், உடல் உபாதைகளாலும், நோயினாலும் அவர்கள் நலிவுற்றிருக்கும்போது, உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு, ஆற்றலாக ஆளிக்கப்படுகிறது. மேலும், இவர்களுக்குத் தேவையான கொழுப்பில் கரையும் வைட்டமின்களான அ,ஈ மற்றும் உ ஆகியவை அப்போதுதான் உடலால் உறிஞ்சப்படும். சுல்று மீன்கள், பாதாம், முந்திரி, வால்நட், முட்டை, தாவர எண்ணெய்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் வாயிலாக பலகூட்டு நிறைவுறாக் கொழுப்பும் (POLY UNSATURATED FATTY ACID) ஒற்றை நிறைவுறாக் கொழுப்பும் (POLY UNSATURATED FATTY ACID) கிடைக்கப்பெறுகிறார்கள். இவ்வகை கொழுப்புகள், இளம் வயதிலேயே ஏற்படும் உடல் பருமன், மூட்டுவலி, முடி உதிர்தல், முகப்பருக்கள் உருவாகுதல் போன்றவற்றை தவிர்க்கவல்லது.

வைட்டமின்கள்

வளரிளம் பருவப்பெண்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கலோரியின் அளவை தினமும் பூர்த்திசெய்துவிட்டாலே, நியாசின், தயாமின், ரிபோபிளேவின் போன்ற "பி' வகை வைட்டமின்கள் அவற்றிற்குரிய அளவில் கிடைத்துவிடும். புதிய செல்களின் உருவாக்கத்திற்குத் தேவையான DNA மற்றும் RNA உற்பத்திக்கு போலாசின் (FOLACIN), B12,  B6 போன்ற வைட்டமின்கள் அவசியம் என்பதால் பட்டைத்தீட்டப்படாத, முழு தானியங்கள், மணிலா, பால், பாலாடைக்கட்டி, தயிர், முட்டை, ஆட்டு ஈரல், பச்சை காய்கள், கீரைகள் போன்ற உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய்க்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்னர் ஏற்படும் லேசான உடல் எடை அதிகரிப்பு, மார்பகத்தில் அழுத்தம், கண்ணில் லேசான வீக்கம், வயிற்று வலி, செரிமான சிக்கல், மனஅழுத்தம், உணவின் மீது வெறுப்பு, அதிக இனிப்பு அல்லது உப்பு சேர்த்த உணவுகளின்மீது விருப்பம், திடீரென்று அதிகரிக்கும் பசி, வகுப்பில் கவனமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு போன்ற முன்மாதவிடாய் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், வைட்டமின் B6 ஒரு நாளைக்கு 100 மி.கிராம் என்ற அளவில் உணவில் சேர வேண்டும். பிற வைட்டமின்களான வைட்டமின் "அ' 15 மற்றும் 18 வயதில் 60; 400 மைக்ரோ கிராமும், வைட்டமின் "A' யானது 13 மற்றும் 18 வயதில வயதில் 40 மி.கிராமும் தேவைப்படுகிறது.

தாதுக்கள் 

கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் இருந்தாலும், பருவ வயது பெண்களுக்கு இரும்புச்சத்தும் கால்சியமும் மிகமிக முக்கியமாகக் கருதப்படுகிறது. வளரிளம் பருவ வயதை உள்ளடக்கிய 14 முதல் 24 வயது வரையுள்ள காலகட்டமே, எலும்புகளின் முழுமையான வளர்ச்சியை நிர்ணயிப்பதால், இப்பருவத்தில் எடுத்துக்கொள்ளும் கால்சியம் சத்துதான் அவர்களின் வயதுக்கேற்ற உயரத்தையும், எலும்புகளுக்கு வளர்ச்சி மற்றும் உறுதியையும் கொடுக்கிறது. இதனால் 500 முதல் 600 மி.கிராம் கால்சியம் தினமும் உடலில் சேரவேண்டும். இதற்காக, கீரைகள், எள், பால் போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்வது, இந்த வயதில் மட்டுமன்றி, எதிர்காலத்திலும் எலும்பு தேய்மான நோய், எலும்புகள் வலுவிழந்து வளைதல் போன்றவை வராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். 

பருவவயதில் பெண் குழந்தையின் மாதவிடாயானது சீரான நிலையில் இருப்பதும் கர்ப்பப்பை கோளாறுகள் இல்லாமலிருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வயதே திருமணத்திற்கும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு சரியான அடித்தளத்தை கொடுக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் வைக்கவேண்டும். ஒவ்வொரு மாதவிடாயின்போதும் ஏறக்குறைய 50 மில்லி லிட்டர் முதல் அதிகபட்சமாக 400 மில்லி லிட்டர் வரை ரத்தம் வெளியேறுவதால் இருக்கிறார்களா என்பதை அடிப்படையான வளர்ச்சி நிலை வரைபடங்களை வைத்தும், மருத்துவரிடமும் தெளிவாக்கிக் கொள்ளலாம். 

வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின், அவர்களிடம் காணப்படுவது பொதுவான உணவுப் பழக்க மாற்றமா? அல்லது உணவும் மனமும் சேர்ந்த சிக்கலா அல்லது முழுவதும் உணவுப் பற்றாக்குறை சார்ந்ததா என்று தொடக்க நிலையிலேயே அறிந்துகொள்ள வேண்டும்.

வயதிற்கேற்ற உடல் எடை இல்லாதிருப்பின் குறுகியகால உணவுப் பற்றாக்குறைவின் விளைவு என்றும், உயரம் இல்லாவிடின் நீண்டகால உணவு பற்றாக்குறை எனவும் கண்டறிந்து, நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக சரிசெய்வதற்கு முன்வரவேண்டும்.

BODY MASS INDEX எனப்படும் உடல் எடை விகிதக் குறியீட்டைப் பயன்படுத்தியும் பருவ வயது பெண்கள் சராசரி எடையும் உயரமும் கொண்ட அளவுகளில் இருக்கிறார்களா என்று பெற்றோர் தெரிந்துகொள்ளலாம். இதற்காக, உடல் எடை மற்றும் உயரத்துக்கான வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி கிடைக்கும் விடை 18-க்கு குறைவாக இருப்பின் அப்பெண் வயதிற்கேற்ற, உயரத்திற்கேற்ற உடல் எடை குறைவாக இருக்கிறாள் என்றும், 18 முதல் 25 வரையில் சரியான எடை என்றும், 25 முதல் 29.9 வரை முதல் நிலை உடல் பருமன் என்றும், 30 முதல் 40 வரை இரண்டாம் நிலை உடல் பருமன் என்றும் 40-க்கு மேல் மூன்றாம் நிலை அதிக உடல் எடை என்றும் கணக்கிடலாம்.

உடல் புற அளவீடுகளான தோல், முடி, பற்கள், பற்களின் ஈறுகள், கண்கள், விரல் நகங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் மற்றும் அசாதாரண தோற்றங்களை வைத்தும் உடலின் ஆரோக்கியத்தைக் கண்டறியலாம். 
பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பருவப்பெண்களின் உணவுமுறை முழுவதும் அவர்களது பெற்றோர்களாலேயே குறிப்பாக தாயாலேயே பூர்த்தி செய்யப்படுவதால், வளரிளம்பெண்களுக்கு உணவளிக்கும்போது அவர்களின் தாய்மார்கள் மனதில் வைக்கவேண்டியவைகள்:

  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் தங்களது தோழிகளுடன் அமர்ந்தும், பிறருடன் பகிர்ந்தும் உணவருந்துவதால், மதிய உணவு எந்த அளவில் இருக்கவேண்டுமோ அந்த அளவிற்கு உண்ணுவார்கள். ஆகவே, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை சத்துகள் குறையாமல், பக்குவமாக சமைத்து, அவர்களுக்குத் தேவைப்படும் அளவைவிட சற்று அதிகமாகவே வைத்துவிடுங்கள்.
  • உணவுகளை வண்ணமயமாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையாகவும் செய்து கொடுத்தால், அவர்களுக்கு ஆர்வம் அதிகரித்து, உணவு உண்ணும் நேரத்தை தவற விடாமலும், எந்த உணவுப்பொருளின் மீதும் வெறுப்பில்லாமலும் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • நார்ச்சத்துள்ள உணவுகளான கீரைகள், முழு தானியங்கள், பழங்கள், காய்கள் போன்றவற்றை தினசரி உணவில் 25 முதல் 40 கிராம் அளவில் சேர்ப்பதால், மலச்சிக்கல் தடுக்கப்படுவதுடன், அதனால் ஏற்படும் தோல் நோய்கள், முகப்பரு, தலை முடி உதிர்தல் ஆகியவற்றையும் தவிர்க்கலாம். கூடுதலாக, வளரிளம்பருவ வயதிலேயே ஏற்படும் உடற்பருமனும் அதற்குக் காரணமாக இருக்கும் தேவையற்ற கொழுப்பு உடம்பில் சேர்வதும் நார்ச்சத்துள்ள உணவுகளால் தடுக்கப்படுகிறது. 
  • அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளடக்கிய நுண்சத்துகள் உடலில் சேரவேண்டுமென்றால், குறைந்தளவு இரண்டு முறைகளாவது முழு பழங்களை தினமும் உணவு அட்டவணையில் சேர்க்கவேண்டும். 
  • முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பூப்படைந்தவுடனும், அடுத்தடுத்து ஏற்படும் மாதவிடாயின்போதும் அப்பெண்ணுக்கு உணவாக, அரைத்த உளுந்து மாவில், நல்லெண்ணெய், கருப்பட்டி, மற்றும் நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதை முதல் 7 நாட்கள் பெற்றோர் கொடுக்க, அடுத்த 8 நாட்கள் "மாமன் களி' அல்லது "தாய் களி' என்ற பெயரில் தாய்மாமன் மற்றும் தாய் தந்தையர் சேர்ந்து கொடுப்பார்கள். இதில் பச்சரிசியில் செய்யப்பட்ட புட்டு, களி, உளுந்துக்களி ஆகியவை அடங்கும். பிறகு, முறையாக நாட்டுக்கோழி சமைத்து அசைவ உணவு கொடுக்கப்படும். இந்த உணவிலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். இப்பொழுதும் பல கிராமங்களில் இந்த சடங்குகளும் உணவு முறைகளும் வழக்கத்தில் இருக்கின்றன. 
  • தற்போது இருக்கும் நகர வாழ்க்கையிலும் இதே உணவுமுறையை கடைபிடிக்கலாம். இல்லையென்றாலும், மாதவிடாய் காலங்களில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள், மாமிச உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, திரவ நிலையில் உள்ள உணவுகளையும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணுவதால் செரிமானக் கோளாறுகள், வாந்தி, வயிற்றுவலி ஆகியவற்றையும் தவிர்க்கலாம். பழச்சாறு, சூப் உணவுகள், காய்கறி சாலட், கொட்டை உணவுகள், முட்டை, பால், பருப்புகள் அதிக ஆற்றலை அளிப்பதுடன், அந்த நேரத்தில் அவர்கள் இழக்கும் சத்துக்களை ஈடு செய்வதாகவும் இருக்கும்.
  • உணவு உண்ணும்போது எந்தவிதமான மனம் சார்ந்த சிக்கல்களும், அழுத்தமும் இல்லாமலிருக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பருவப்பெண்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துரைக்கவேண்டும்.
  • குறிப்பாக கல்லூரிப்பெண்கள் அவர்களுக்குத் தேவையான உணவை அவர்களே சமைத்துக்கொள்ளும் பழக்கத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துவிடுவது பெற்றோர்களின் கடமையாகும்.
  • பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வெளி உணவகங்களில் அதிக கலோரி, கொழுப்பு, உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதை முடிந்த அளவிற்கு தடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை பெற்றோர் பக்குவமாகக் கூறவேண்டும். இதில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களும் பங்கெடுத்துக்கொள்வது நல்ல முடிவுகளைக் கொடுக்கும். 

- ப. வண்டார்குழலி இராஜசேகர்
உணவியல் நிபுணர், 
அரசு பொது மருத்துவமனை, காரைக்கால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com