மார்பக அழற்சி (Mastitis) என்றால் என்ன?

ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
மார்பக அழற்சி (Mastitis) என்றால் என்ன?

ஹோமியோபதி மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல்வேறு சிறப்புத் தன்மைகளைக் கொண்டது. பிற முறை மருத்துவர்கள் ஐந்தறிவு படைத்த எலி, பூனை, முயல், குரங்கு போன்ற விலங்குகளிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே (ஆரோக்கியமான) மனிதரிடம் பரிசோதனை செய்யப்பட்டவை. 

மருந்தின் அமைப்பு, வீரியப்படுத்துதல், மருந்தைத் தேர்வு செய்தல் அனைத்திலும் ஹோமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபடுகிறது. ஹோமியோபதியில் உடலுக்கு மட்டுமல்லாமல் மனத்திற்கும் பிரதானப் பங்கு உண்டு. உடலும், மனமும், உயிரும் இணைந்த படைப்பாக முழுமையாக மனிதனைப் பார்க்கிறது ஹோமியோபதி. உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவுகளை வியாதி என ஹோமியோபதி கூறுகிறது. 

உடல் இயக்கத்தில் ஏற்படும் நலிவு, பாதிப்புகளால் வெளிப்படும் அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது மனக்குறிகள் [Mental Symptoms]. இரண்டாவது, உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புறக்குறிகள் [Physical Symptoms] இவைகளைத் தொகுத்து குறிகளின் முழுமைக்கு பொருந்தக் கூடிய ஒரு மருந்தை தேர்வு செய்து கொடுப்பதால் நோயாளி உடலாலும் மனதாலும் முழுமையாக, நிரந்தரமாக குணமாகிறார். 

பெண்களுக்கு பயன் தரக் கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் அதிக அளவு உள்ளன. பருவமடைந்த காலம் முதல் மாதவிலக்கு நிற்கும் காலம் வரை [from menarche to menopause] ஏற்படக் கூடிய பெண்களின் உடல் நலப் பிரச்சனைகள் ஏராளம். வெளியில் சொல்ல முடியாத நிலையில், தங்கள் பிரச்சனைகளுக்கு எந்தவிதச் சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருக்கும் பெண்கள் பலர். 

கல்வியும், நாகரிகமும் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்குப் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பிரச்சனைகளுக்கு மருத்துவம் செய்துகொள்ள முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இன்றைக்கு இங்குள்ள சமூக அமைப்பில் ஒரு பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் குடும்பமே பாதிக்கப்படும். எனவே பெண்கள் தங்கள் நலத்தை பற்றி அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. 

மற்ற மருத்துவ முறை கைவிட்ட, சிக்கலான, பெண்களின் நாள்பட்ட வியாதிகளைக் கூட ஹோமியோபதியில் எளிமையாக, இயற்கையான வழி முறைகளில் குணப்படுத்த முடியும். எனவே பெண்கள் தங்களுக்கு எந்த உடல்நல, மனநலப் பிரச்சனைகளாக இருந்தாலும் முழு நம்பிக்கையோடு ஹோமியோபதி மருத்துவத்திற்கு வரலாம். 

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் 13-லிருந்து 15 வயதிற்குள் பெண்கள் பருவமடைந்து விடுகின்றனர். ஒரு சில பெண்கள் உரிய வயது கடந்தும் பருவமடைவதில்லை. அவர்களது உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பல மருந்துகள் உள்ளன. பெரும்பாலான நேரங்களில் ரத்த பரிசோதனையை வைத்தோ, மற்ற மருந்துகளைத் தேர்வு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மன நிலை விருப்பு, வெறுப்பு பழக்க வழக்கங்கள், உடல் அமைப்பு, நடவடிக்கைகள், குடும்பப் பின்னணி, அப்பெண்ணைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்து அதன் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கும் போது அந்தப் பெண்ணுக்கு விரைவில் முதல் மாதவிடாய் ஏற்பட்டு விடுகிறது. 

பெரும்பாலான பெண்களுக்குள்ள பிரச்சனை என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Menses). இந்தப் பிரச்சனையும் பெண்ணுக்குப் பெண் மாறுகிறது. எனவே மருந்தும் மாறுபடுகிறது. முந்திய மாதவிடாய் (Early Menses), பிந்திய மாதவிடாய் (Late Menses), பெரும்பாடு-எனப்படும் அதிகளவு மாதப்போக்கு ஏற்படுதல், மாதவிடாயின் போது கடுமையான வயிற்று வலியும், உடல் வலிகளும் ஏற்படுதல், ரத்தப் போக்கின் நிறத்திலும், தன்மையிலும் மாறுபாடு என்பவை எல்லாம் கர்ப்பப்பை இயக்கம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சனைகள். 

கர்ப்பப்பையின் இயக்கம், செயல்பாடுகளை மையமாக வைத்தே பெண்களின் ஆரோக்கியம் அமைகிறது. எனவே கர்ப்பப்பை சார்ந்த எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தாமதமின்றி உடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

திருமணமான பின் ஏறக்குறைய ஓராண்டுக்குள் கருத்தரிக்கவில்லை என்றால் கணவன், மனைவி இருவருமே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பெண்களைப் பொறுத்தவரையில் மலட்டுத்தன்மையை நீக்கித் தாய்மைக்குரிய தகுதியை ஹோமியோபதி மருந்துகள் மூலம் பெறலாம்.

பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை பலவீனம் மற்றும் இரத்தசோகை காரணமாகவே ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது. கர்ப்பப்பை பலவீனத்தைப் போக்க மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த Caulophyllum, pulsatilla, Nat.mur, Sepia போன்ற பல ஹோமியோ மருந்துகள் உதவுகின்றன. 

சினைப்பையில் (Ovary) அல்லது கர்ப்பப்பையில் (Uterus)பலவித கட்டிகள், இயற்கைக்குப் புறம்பான வளர்ச்சிப்போக்குகள் (Cysts, Fibroids, Tumors) ஏற்பட்டு அதனால் மலட்டுத்தன்மை உருவானாலும் ஹோமியோபதி மருந்துகள் அவற்றை அகற்றி முழுமையான நலமளிக்கும். மலட்டுத்தன்மையை மாற்றுவதற்கான ஆபரேஷன், செயற்கை முறைக் கருத்தரிப்போ எதுவும் தேவைப்படாது. 

கர்ப்பகாலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வாந்தியை MORNING SICKNESS என்று அழைக்கின்றனர். பெரும்பாலும் இது காலை நேரத்திலேயே ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி நாள் முழுதும் கூட நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களில் வாந்தி வருவது இயல்பானதே.

இருப்பினும் நீண்ட நாட்களுக்கு வாந்தி நீடித்தால் அது பெண்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். உணவு மீது வெறுப்பு ஏற்படும். இதனால் தாய் பலவீனமடைந்து கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துகள் சேராமல் எடையிழப்பு ஏற்படும். இதனால் குழந்தை பிறக்கும்போதே பல்வேறு உபாதைகளுடன் பிறப்பது நேரிடுகிறது. மேலும் தாயின் உடலில் நீர்ச்சத்து குறைந்து அபாய நிலை ஏற்படுவதும் உண்டு.இதற்கு அலோபதி முறையில் நிறைய மருந்துகள் இருந்தாலும் ஹோமியோபதியில் பக்க விளைவுகள் இல்லாத, கர்ப்ப காலத்தில் உடலின் பிற நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. உணவின் வாசனையே பிடிக்காதபோது, உணவு மீது வெறுப்பு ஏற்படும்போது காக்குலஸ் கோல்சிகம், இபிகாக், செபியா ஆகிய மருந்துகள் கொடுக்கப்படும். சிம்போரி கார்பஸ் – என்ற ஹோமியோ மருந்து கர்ப்ப கால வாந்திக்கு  பிரத்யேகமானது.

கர்ப்ப காலத்தின் இடை மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவு, மலச்சிக்கல், மூலம், அசுத்த இரத்தக்குழாய் வீக்கம், திடீரென ஏற்படும் இரத்தப்போக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் எளிமையாக, மென்மையாக குணப்படுத்தலாம். மேலும் ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள், பின் விளைவுகள் இல்லாததால் பாதுகாப்பானவை. கர்ப்பப் பையிலுள்ள கருவிற்கும், கர்ப்பிணித் தாயின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது ஹோமியோபதி. 

பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனையும் உடனுக்குடன் நீங்கி சுகப் பிரசவம் ஏற்படச் செய்ய ஹோமியோபதியில் மருந்துகள் உதவுகின்றன. பிரசவித்த தாய்மார்கள் சிலருக்கு பால் சுரப்பதேயில்லை. அல்லது குறைவாகச் சுரக்கும் நிலை இருக்கும். அதனால் குழந்தை பிறந்த நாட்களிலேயே குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே தாய்மார்கள் போதுமான அளவு பால் சுரப்பதற்கு ஹோமியோபதியில் மருத்துவம் செய்து கொள்வது அவசியம். 

மார்பகப் பராமரிப்பிலும் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டும். கட்டிகளோ, சினைப்புகளோ, வீக்கமோ, வலியோ, காம்புகளில் வெடிப்போ, புண்களோ காணப்பட்டால் கை வைத்தியம் செய்து அப்படியே விட்டு விடக்கூடாது. மார்பகக் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. ஹோமியோ சிகிச்சை மூலம் அவற்றை கரைத்து குணப்படுத்தி மீண்டும் கட்டிகள் வராமல் செய்ய முடியும். மார்பக அழற்சி (Mastitis) காரணமாக ஏற்படும் கல் போன்ற இறுக்கத்தால், வீக்கத்தால் துணி பட்டால் கூட தாங்க முடியாத வலி சிலருக்கு ஏற்படும். இதற்கு உடனடி நிவாரணம் மட்டுமல்லாமல் முழு குணமும் பெற ஹோமியோபதி மருத்துவமே சிறந்தது. ஹோமியோபதி மருத்துவம் பெண்களின் நம்பகமான, உற்ற தோழியாகத் திகழ்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் Cell : 94431 45700
Mail : alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com