சுண்டல் சுவையும் அதிகளவு புரதச் சத்தும் மிகுந்த ஒரு ஆரோக்கிய உணவு. இந்த பண்டிகை சீஸனில் விதவிதமான சுண்டல்களைத் தயார் செய்து அசத்த இதோ சில குறிப்புக்கள்.
சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊற வைத்த பின்பு வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு பிறகு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும்.
சுண்டலுக்கு தேங்காய்த் துருவலை சற்று வறுத்துப் போட்டால் கெடாது. கொப்பரைத் துருவலையும் போடலாம். இட்லி மிளகாய்ப் பொடி தூவினாலும் சுவையாக இருக்கும்.
சுண்டலில் கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்தால் நிறம் அழகாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
சுண்டலுக்கு கடலையை ஊற வைக்கும்போது சிறிது சமையல் சோடாவை சேர்த்து கழுவி விட்டு வேறுநீரில் ஊற வைத்தால் விரைவில் வெந்துவிடும்.
கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சுண்டல் செய்ய முன்பே ஊற வைக்க வேண்டாம்.
அவலை வறுத்துப் பொடித்து சர்க்கரைப் பொடி ஏலக்காய்ப் பொடி கலந்து நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகள் பிடித்து நவராத்திரி தேவிகளுக்கு நைவேத்யம் செய்யலாம்.
கடலைப் பருப்பை ஊற வைத்து சுண்டல் செய்து கீழே இறக்கும்போது சர்க்கரையை தூவி கலந்து இறக்கினால் ஜோராக இருக்கும்.
முழு கடலையை சுண்டல் செய்யும் போது மேலே மசால் பொடியைத் தூவி கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.
பச்சைப் பயறை வேக வைத்து வெல்லப் பாகு வைத்து அதில் கலந்து இனிப்புச் சுண்டலும் செய்யலாம். காரச் சுண்டல் செய்தால் பெருங்காயம் தூவி செய்தால் வாய்வு வராது.
வேர்க்கடலையைச் சுண்டல் செய்யும்போது மாங்காயையும், காரட்டையும் துருவி சேர்த்து குடமிளகாய் துருவி கலந்தால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
எல்லாச் சுண்டலுக்குமே பொடி உப்பு தூவி கலந்தால் ஒன்று போல உப்பு சேர்ந்திருக்கும்.
பாசிப்பருப்பு சுண்டலில் வெல்லத்தை தட்டி மேலே தூவினால் நன்றாக இருக்கும்.
- ஆர். ஜெயலட்சுமி