புது தில்லி: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, மறைந்த ஆன்மிக குரு பிரமுக் சுவாமி மஹராஜ்(95), ஆன்மிக நெறிகளைக் காப்பதற்காகப் போராடியவர் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரமுக் சுவாமி, குஜராத்தின் போடாத் மாவட்டத்தில் உள்ள சாரங்பூரில் சனிக்கிழமை இறந்தார். இது தொடர்பாக பிரணாப் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பிரமுக் சுவாமி மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவர் எப்போதும் மனிதநலனில் அக்கறை கொண்டவர். சுவாமிஜியின் போதனைகள் தற்போதைய உலகில் மனித குலத்துக்கு பொருத்தமானவையாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேயத்தின் வழிகாட்டி: இதனிடையே, மனிதநேயத்தின் வழிகாட்டியாக பிரமுக் சுவாமி திகழ்வார் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பிரமுக் சுவாமி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். ஆன்மிகத் தலைவரான அவர் சுவாமிநாராயண் சன்ஸ்தான் அமைப்பின் தலைவராவார். அவர் ஏராளமான கோயில்களை உருவாக்கியும், பிரதிஷ்டை செய்தும் உள்ளார்.
அவற்றுள் ஹிந்து பண்பாட்டையும், ஆன்மிகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தில்லியில் கட்டப்பட்ட அக்ஷார்தாம் கோயில்கள், மனித நேயத்தின் வழிகாட்டியாக இருக்கும். பரந்த மனப்பான்மை கொண்ட அவரது கருத்துகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
மோடி அஞ்சலி செலுத்துகிறார்: மறைந்த பிரமுக் சுவாமி மஹராஜின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.