கான்பூர்: நாடு முழுவதும் புதனன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வெட்டப்படும் ஆடுகளோடு செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் புதனன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில் ஆடுகள், மாடுகளை பொது இடங்களில் பலியிடக் கூடாது என உத்தரப் பிரதேச அரசு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்நிலையில் வெட்டப்படும் ஆடுகளோடு செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியர்களை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள், மாடுகளை பொது இடங்களில் வெட்டி பலியிடக்கூடாது. அதேபோல பலியிடும் முன்பு ஆடுகள், மாடுகளுடன் செல்ஃபி எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடும் போக்கு சில ஆண்டுளாக பரவலாக உள்ளது.
ஆனால் நாம் இதற்கு அனுமதி அளிக்க முடியாது. அதுபோலவே விலங்குகளை பலியிடும் கோரக் காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூகவலை தளங்களில் வெளியிடும் செயலையும் அனுமதிக்கக் கூடாது. பொதுவாகவே பக்ரீத் பண்டிகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.