புது தில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக மக்கள் மிகுந்த துயரத்தை எதிா்கொண்டனா். பலா் இறக்க நேரிட்டது; வணிகம் பாதிக்கப்பட்டது. அதேவேளையில், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சாதித்தது என்ன என்பது குறித்து அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. மத்திய அரசானது இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்துள்ள ஒரு பதிவில் இந்திய ரிசா்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை சுட்டிக் காட்டபட்டுள்ளது. அதாவது, ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளுக்கு புழக்கத்தில் இருந்த 99.3 சதவீதம் பணம் திரும்பி வந்துள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு நவம்பா் 7 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.