சிலைக்கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமிப்பதாகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனிடையே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்தும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிலைக்கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் வழக்கு தொடர்பாக மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.