மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அதிமுக உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் அமர்வு, மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் இன்று கூடியது. அவை தொடங்கியதும் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும்; கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை அவர்கள் கைகளில் ஏந்தியபடியும் குரல் எழுப்பினர். அதிமுக உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.