மாலத்தீவுக்கு இந்தியா ரூ.10,000 கோடி நிதியுதவி

மாலத்தீவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, ரூ 10, 000 கோடி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி.


மாலத்தீவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, ரூ 10, 000 கோடி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அறிவித்தார். மேலும், இந்தியா-மாலத்தீவு இடையே நுழைவு இசைவு வழங்குவது உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, பிரதமர் மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுலா, பொது சுகாதாரம், குற்ற வழக்குகள், முதலீடுகளை அதிகரிப்பது ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சந்திப்புக்கு பின்பு பிரதமர் மோடியும், அதிபர் முகமது சோலியும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி பேசுகையில், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. மாலத்தீவில் அமைதியை நிலைநாட்ட மற்றும் அந்நாட்டின் வளர்ச்சிக்காக இந்தியா எப்போதும் துணை நிற்கும். இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடும். இரு நாடுகளின் விருப்பத்துக்கு தீங்கு விளைவிக்கும் படியான செயல்களுக்கு நாட்டில் அனுமதியில்லை. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். 
மாலத்தீவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுமார் ரூ. 10,000 கோடி நிதி வழங்கப்படுகிறது. தீவு நாடுகளில் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மாலத்தீவுடன் நல்லுறவை மேம்படுத்தவே இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை நெருக்கமாக்க, கலாசாரம், சரக்கு மற்றும் சேவைகள், தகவல்கள் அனைத்தையும் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றார். 
மேலும், காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் மாலத்தீவு இணைய உள்ளதை வரவேற்பதாக மோடி தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய முகமது சோலி, கடல் பாதுகாப்பு, இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக மாறுவதற்கு மாலத்தீவு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கும் வேளையில், இந்தியா-மாலத்தீவு இணைந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை முகமது சோலி சந்தித்தார். இரு நாடுகளிலும் உள்ள உள்நாட்டு பிரச்னைகள் மற்றும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாலத்தீவின் முன்னாள் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன், இந்த ஆண்டு பிப்ரவரியில் அங்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியதை அடுத்து இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு மோசமடைந்தது. அதையடுத்து புதிய அதிபரான முகமது சோலியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி கடந்த மாதம் மாலத்தீவு சென்றிருந்தார். அப்போது, மாலத்தீவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த உள்ளதாக மோடி தெரிவித்தார். அதையடுத்து இந்தியா-மாலத்தீவு இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பை புதுப்பித்துக் கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில் மாலத்தீவு அதிபர் இந்தியா வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com