மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவரான ஹபீஸ் சயீதை பாதுகாப்போம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியதாக வெளியான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி வரும் நிலையில், அவரது அமைச்சரவையில் இருக்கும் உள்துறை இணையமைச்சர் ஷெர்யார் அஃப்ரிடி, ஹபீஸ் சயீதுக்கு ஆதரவாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீது பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். அதையடுத்து அவரை பயங்கரவாதி என்றும், அவரது அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், சயீது தொடங்கிய மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யுமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அந்த அமைப்பை அரசியல் கட்சியாக ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது. மேலும், அந்த அமைப்பு அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக அமைச்சர் ஷெர்யார் அஃப்ரிடியும், மில்லி முஸ்லிம் லீக் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் பேசுவது போன்ற விடியோ வெளியாகியுள்ளது. அதில் அமைச்சர் பேசியிருப்பதாவது:
மில்லி முஸ்லீம் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தேர்தல் ஆணையம் அறிவிக்க நாங்கள்( இம்ரான் கான் அரசு) அனுமதிக்க மாட்டோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை, ஹபீஸ் சயீதையும், பாகிஸ்தானுக்காகவும், உண்மைக்காகவும் குரல் கொடுப்பவர்களையும் பாதுகாப்போம். எங்களது அரசு அவர்களுக்கு என்றுமே துணை நிற்கும். நாங்கள் உண்மைக்கு ஆதரவாக இருக்கிறோமோ இல்லையா என்பதை நாடாளுமன்ற அவைக்கு வந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அந்த விடியோவில் அமைச்சர் ஷெர்யார் அஃப்ரிடி பேசியுள்ளார்.