ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வன்முறையை கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவை கண்டனத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள், 7 பொதுமக்கள், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தனர். பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் மேலவை தீர்மானம் நிறைவேற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஷெர்ரி ரஹ்மானால் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானம், தார்மிக மற்றும் ராஜதந்திர ஆதரவு அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு வானொலி அறிவித்துள்ளது.
மேலும் அந்த தீர்மானத்தில், ஏற்கனவே மேலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச விவகாரமாக அறிவித்து, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சிறப்பு தூதர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் மேலவைத் தலைவர் ஆரிஃப் ஆல்வி செவ்வாய்கிழமை கூறுகையில், காஷ்மீர் என்பது பகிர்வு முடிவடையாத ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. காஷ்மீர் மக்கள் நடத்தி வரும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான போராட்டத்துக்கு தார்மிக, ராஜதந்திர அடிப்படையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார்.
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், அந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் மழுப்பலாக பதில் அளித்தார்.