நைனிடால்: யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான திவ்யா பார்மஸி நிறுவனம், தனது லாபத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை உள்ளூர் விவசாயிகள் மற்றும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
யோகா குரு பாபா ராம் தேவ் சொந்தமான திவ்யா பார்மஸி நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. முழுவதும் மாநிலத்தில் விளையும் ஆயுர்வேத, மூலிகை பொருட்களைக் கொண்டை மருந்துகளைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், பல்லுயிரி சட்டம் 2002-ன் கீழ், திவ்யா ஃபார்மஸி நிறுவனம், உள்ளூரில் விளையும் மூலப் பொருட்கள், மூலிகை மற்றும் ஆயுர்வேத பொருட்களை கொண்டு மருந்துகளைத் தயாரிப்பதால், தனது லாபத்தின் குறிப்பிட்ட பகுதியை அப்பகுதி விவசாயிகளுக்கும், குறிப்பிட்ட சமூக மக்களுக்கும் அளிக்க வேண்டும் உத்தரகாண்ட் பயோ போர்டு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திவ்யா பார்மஸி நிறுவனம், உத்தரகாண்ட் பயோ போர்டு, எங்களுக்கு உத்தரவிட எந்த அதிகாரமும் கிடையாது என்றும் எந்தவொரு பங்களிப்பையும் செலுத்தவோ அல்லது பொறுப்பேற்கவோ முடியாது என்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஒத்திவைத்தனர்
இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் நகல் நேற்று முன்தினம் கிடைத்தது. அதில், பயோ போர்டுக்கு சாதகமாகமான அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில், உத்தரகாண்ட் பயோ போர்டுக்கு, திவ்யா பார்மசியை லாபத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முழு உரிமை உள்ளது. தனது எல்லைக்கு உட்பட்டுத்தான் தீர்ப்பளித்துள்ளது. இயற்கை வளங்கள் என்பது தேசிய சொத்து மட்டுமல்ல. அது எங்கிருந்து எடுக்கப்படுகிறதோ அங்கு வாழும் மக்களுக்கும் சொந்தமானதுதான் என்றும் தனது லாபத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை உள்ளூர் விவசாயிகள் மற்றும் சமூக மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
இதையடுத்து திவ்யா ஃபார்மஸி நிறுவனம் தன்னுடைய லாபத்தில் ரூ.421 கோடியில், ரூ.2 கோடியை உள்ளூர் விவசாயிகள், சமூக மக்களுக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.