புது தில்லி: ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் கட்சித் தலைவராகலாமா என்பது குறித்துக் கருத்துக் கூறுமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்தவரான அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார். அதில் பல்வேறு ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் அரசியல் கட்சித் தலைவராக தொடர்வது தார்மீக நெறிகளுக்கு எதிரானது என்றும், அவர்கள் தலைவராகத் தொடரக் கூடாது என்றும் உத்தரவிடக் கோரியிருந்தார்.
அந்த வழக்கானது வியாழனன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் கட்சித் தலைவராகலாமா என்பது குறித்துக் கருத்துக் கூறுமாறு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையானது வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதியில் இருந்து துவங்கி நடைபெற இருப்பதால் அதற்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.