பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான தேவையில்லை என்று கூறி 14-ஆவது நிதி ஆணைய கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. எனவே 15-ஆவது நிதி ஆணைய கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம்.
இதற்காக பிகாரில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். அனைவரும் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற எங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்து தொடர்ந்து முயற்சித்து வருகிறோம் என்றார்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முக்கியத் தலைவர் அஷோக் சௌத்ரி தலைமையிலான அக்கட்சியின் 6 பேர் கொண்ட குழு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பான ஆலோசனைக்கு அவரும் நேர்மறையாக பிரதிபலித்ததாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.