ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக சிபிஐ திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.113 கோடி ஊழல் நடந்ததாக 2012-இல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் மாநில போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மஜீத் யாகூப் மற்றும் நிசார் அகமது கான் ஆகியோர் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தனர்.
இதையடுத்து, 2015-இல் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பிறகு, இந்த வழக்கில் 1 மாத காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சிபிஐ-க்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ஸ்ரீநகர் மாஜிஸ்திரேத் தலைமை நீதிபதி ஐஜாஸ் அகமது கான் முன்பு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் ஃபாரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஃபாருக் அப்துல்லா தற்போது வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார்.