லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிப்பதால், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை, 3-ஆம் நபர் காப்பீட்டு பிரிமியம், சுங்கச் சாவடிக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
இதில் நாடு முழுவதும் 85 லட்சம் மற்றும் தமிழகம் முழுவதும் சுமார் 4.50 லட்சம் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் காய்கறிகளின் விலை சனிக்கிழமை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 20 ஆயிரம் லாரிகளும் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இப்போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 3-ஆவது நாளாகத் தொடர்கிறது. இதனால் அரசுக்கும், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் ரூ.1,000 கோடி வரை வருவாய் இழப்பும், மத்திய அரசுக்கு வரி வருவாய் அடிப்படையில் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தையொட்டி விவசாயப் பொருள்களை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.