அம்ரோஹா(உ.பி): கலைக்கப்பட்ட கருவை பையில் வைத்து எடுத்துக் கொண்டு, கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணால் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கொட்வாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் ஒருவர். அவர் தனது தாயுடன் ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றைக் கொடுக்கச் சென்றுள்ளார். தனது கையில் பை ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் தனது புகாரில் மனோஜ் (வயது 22) என்னும் வாலிபர் தன்னை 5 மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்து விட்டார் என்றும், தன்னை கட்டாயப்படுத்தி மனோஜ் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் என்றும் அந்த இளம்பெண் புகார் கூறியுள்ளார். அத்துடன் தான் கொண்டு சென்றிருந்த பையை அங்கிருந்த காவலர்களிடம் காண்பித்துள்ளார். அந்தப் பையில் கலைக்கப்பட்ட கருப்பிண்டம் இருந்ததைக் கண்ட போலீசார் அதிர்ந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக கருவை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் மனோஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியினைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.