திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அதிலும் திரிபுரா மற்றும் நாகாலந்து மாநிலங்களில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
திரிபுராவில் பாஜக வரலாறு படைக்க காத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மேகாலயாவிலும் பாஜக-வின் இந்நிலை பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய இந்திய தேர்தல் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்துள்ளது என்றார்.
பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். இந்த 3 மாநிலங்களிலும் உள்ள பாஜக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.