சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் நக்ஸல் எச்சரிக்கை இருந்தபோதும், வாக்காளர்கள் காண்பித்த ஆர்வம் பாராட்டுக்குரியது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தெரிவித்துள்ளார்.
90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 12 தொகுதிகளுக்கு நக்ஸல் அச்சுறுத்தல் இருப்பதால் ரெட் ஸோனாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் ஓட்டு போட்ட மையினை விரலில் கண்டால் விரல் வெட்டப்படும் என்று நக்ஸல் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அங்கு மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓபி ராவத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வாக்காளர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது.
ஒரு சதவீத வாக்குப்பதிவு கூட இல்லாத வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பதை பார்க்கிறோம். இந்த முறை எந்த புகாரும் வரவில்லை. மிகச் சிறிய அளவிலேயே தவறுகள் நிகழ்ந்துள்ளது. மற்றபடி, வாக்குப்பதிவின் போது எந்த பிரச்னையும் எழுந்ததாக தகவல்கள் வரவில்லை. தேர்தல் நடைபெற்றவிதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
முன்னதாக, மாநில தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
"வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சத்தீஸ்கரின் முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான அடுத்தகட்ட தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்" என்றார்.