90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப் பேரவை தேர்தலில் முதல்கட்டமாக, நக்ஸல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 4,336 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இதில் 12 தொகுதிகள் அதிக பாதிப்புடைய 'ரெட் ஸோன்' பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி துணை ராணுவப் படையினர், மாநில காவல்துறையினர் என 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20-ஆம் தேதி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.
இதனிடையே வாக்குப்பதிவை சீர்குலைக்கும் விதமாக பிஜபூர் பாமெட் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதல் சம்பவங்களுக்கு பாதுகாப்புப் படையினர் அதற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 5 கோப்ரா படை வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 7 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.