உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல்வேறு மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறி, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது ஆட்சேபத்தைப் பதிவு செய்தார்.
ராஜஸ்தான் அரசு தொடர்புடைய வரி விதிப்பு வழக்கு ஒன்று, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ராஜஸ்தான் அரசு சார்பில் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். ஆனால், அந்த மனு மீது விசாரணை நடத்தாமல், தள்ளுபடி செய்வதற்கு நீதிபதிகள் முடிவு செய்தனர். அப்போது, கே.கே.வேணுகோபால் கூறியதாவது:
மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, உச்சநீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்கிறார்கள். ஆனால், வழக்குரைஞர்களின் வாதங்களை கேட்காமல், அந்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. குறைந்தபட்சம், தொடக்க நிலையிலாவது வழக்குரைஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டறிய வேண்டும்.
தற்போது, ஒரு மாநிலத்தின் வருவாய் சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக ஆஜராகியிருக்கிறேன். இதில், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் தயங்குவது ஏன்? என்று கே.கே.வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அப்போது, அவரது கவலைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், எந்தவொரு மனுவையும் படிக்காமல் நிராகரிப்பதில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.