இந்தியாவில் 90 சதவீத பெற்றோர், தங்களது பிள்ளைகள் படிப்புக்காகத்தான் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பதாக வெலோசிட்டி எம்ஆர். ஐரானிகலி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லை, இணையதளத்தைப் பயன்படுத்தும் போது வரும் பாப்-அப்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாத பல விஷயங்களை தெரியப்படுத்துவதாகவும் பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.
அதே சமயம், இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்க்கும் மக்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு தவறாக வரும்.
முதல் விஷயம், குழந்தைகள் மிகக் குறைந்த வயதில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள். 6-10 வயதுக்குள் இணையதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விடுகிறார்கள். என்னதான் மத்திய அரசு ஆபாசப் படங்களைக் கொண்ட 827 வலைத்தளங்களை முடக்கியிருந்தாலும், அதனை எல்லாம் கடந்து தாங்கள் விரும்பும் வலைத்தளங்களை பார்க்கும் நுணுக்கங்களையும் பிள்ளைகள் எளிதாகவே அறிந்து கொள்கிறார்கள்.
குழந்தைகளை விட, பதின்ம வயது பிள்ளைகளிடம் இருந்து இதுபோன்ற வலைத்தளங்களை பிரிப்பது என்பது இன்னும் சற்றுக் கடினமான வேலைதான். முதலில், படிப்புக்காக அவர்கள் லேப்டாப் அல்லது செல்போனில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது. இதே தான் சமூக வலைத்தளங்களுக்கும் பொருந்தும்.
பதின்ம வயது பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு நிச்சயம் சமூக வலைத்தளங்களைப் பார்த்து ஒரு அச்சம் இருக்கத்தான் செய்கிறது. சமூக வலைத்தளங்களைப் பற்றிய அச்சம் பிள்ளைகளுக்கு இல்லாமல் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகி விடுகிறது.
எனவே நாம் நம்பிக் கொண்டிருப்பதே உண்மை என்று நினைக்காமல், சில விஷயங்களைக் கவனத்தில் எடுத்து கவனித்துக் கொள்வது அவசியம் என்பதை நினைவில் கொள்ளலாம்.