தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்பட 300 பேருக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தது. ஆனால், அதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
தெலங்கானாவில் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால் எந்த விதமான புதிய திட்டங்களை அறிவிக்கவும், அரசாணைகளை வெளியிடவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநில அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை திடீரென ஓர் அரசாணையை வெளியிட்டது. அதாவது ஆந்திரத்தில் இருந்து தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி கடந்த 2009 - 2012 வரையில் நடைபெற்ற போராட்டத்தின்போது சந்திரசேகர் ராவ், அவரது மகன் ராமாராவ், மகள் கவிதா உள்ளிட்ட 300 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் அந்த ஆணையை திரும்பப் பெறவதாக புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெலங்கானா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.