பர்வானி (ம.பி): காங்கிரஸ் தலைவர் ராகுல் 'மோடிஃபோபியா' வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பிரசதேசத்தில் வரும் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசித் தேதியும் முடிந்து விட்ட காரணத்தால் தற்போது தேர்தல் பிரசாரமானது சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் 'மோடிஃபோபியா' வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பிரசதேசத்தில் உள்ள பர்வானி என்னும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் அவர் வியாழனன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் பிரதமர் மோடியும், மாநிலத்தில் முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகானும் வளர்ச்சி பாதையில் நடைபோட்டு வருகின்றனர். ஆனால் காங்கிரசுக்கு அப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால், வெறுமனே மோடியை பற்றி கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
நான் ஒருமுறை விமான நிலையத்தில் காத்திருந்த தருணத்தில் ராகுலின் உரைகளைக் கேட்டேன். அப்போதுதான் அவரது உரைகளில் மோடி பற்றிய ஒரு ஒற்றைத் தன்மையுடன் கூடிய பிரச்னை இருப்பதைக் கண்டு கொண்டேன்.
ராகுலிடம் பேசுவதற்கு என்று எதுவும் இல்லை. அவரது கட்சி ஆட்சியில் இருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்ட ஊழல் குறித்தோ, அல்லது அவர்களது ஆட்சியில் வளர்ச்சி குறித்தோ; முதலில் அப்படி எதுவுமே இல்லை எண்பது வேறு, அவரால் பேச முடியாது.
சொல்லப்போனால் அவரது பேச்சுக்களில் இருந்து என்னால் அவர் காங்கிரசுக்கு பிரசாரம் செய்கிறாரா அல்லது பாஜகவுக்கு பிரசாரம் செய்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.