பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யாமல் போராட்டம் காரணமாக மீண்டும் புணேவுக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை கோயிலில் தரிசனம் செய்வதற்காக பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் 6 பெண்களுடன் புணேவில் இருந்து இன்று காலை 4.45 மணிக்கு கொச்சி வந்தடைந்தார்.
ஆனால், அவர்களை விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வர அனுமதிக்காமல் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர்.
நேரம் கூட கூட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பாஜகவைச் சேர்ந்த ஆர்வலர்களும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸார் இருந்தபோதிலும், விமான நிலையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் உள்ள அனைத்து நுழைவாயில் மற்றும் வெளியே வரும் பாதைகளை போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர்.
இதனால், த்ருப்தி தேசாய் மற்றும் உடன் வந்த பெண்கள் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக கொச்சி விமான நிலையத்திலேயே உள்ளனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 200 பேர் மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டதன்படி த்ருப்தி தேசாய் மற்றும் உடன் வந்த பெண்கள் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யாமல் மீண்டும் புணேவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள், இரவு 9.50 மணி விமானத்தில் திரும்பவுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, இதுதொடர்பாக த்ருப்தி தேசாய் கூறுகையில், "எங்களுக்கு சேவை புரிய வந்த டாக்ஸி ஓட்டுநர்களை போராட்டக்காரர்கள் மிரட்டியுள்ளனர். எங்களுக்கு தங்கும் அறை வழங்கினால் ஹோட்டலை சேதப்படுத்திவிடுவோம் என்று ஹோட்டல் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் என்று தங்களை அழைத்துகொள்பவர்கள் எங்களை அச்சுறுத்துவது வருத்தமளிக்கிறது என்றார்.
கேரளாவுக்கு வருகை தரும் முன், சபரிமலை கோயிலில் தரிசனம் மேற்கொள்ளாமல் மகாராஷ்டிராவுக்கு திரும்பமாட்டேன் என்று சொல்லியிருந்தது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசின் முடிவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இதர வலதுசாரி சிந்தனை கொண்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதற்கிடையே, கோயில் நடை கடந்த அக்டோபர் மாதம் 4 நாட்களும், நவம்பர் மாதம் 2 தினங்களும் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது. அப்போது, 10 முதல் 50 வயதுக்கிடையிலான ஒரு சில பெண்கள் கோயிலுக்கு சென்று தரிசிக்க முயற்சித்தனர். ஆனால், போராட்டங்களின் வீரியம் காரணமாக அவர்களால் கோயிலுக்குள் சென்று தரிசனம் மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், த்ருப்தி தேசாய் சபரிமலை கோயிலில் இன்று தரிசனம் மேற்கொள்ளப்போவதாக கடந்த புதன்கிழமை அறிவித்தார். மேலும், தரிசனம் மேற்கொள்ள கேரளாவுக்கு வரும்போது தனக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.