புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்யத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது
பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், நிலைமையை கண்காணித்து உதவ உள்துறை செயலருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் அப்போது உறுதி அளித்துள்ளார்.