கொல்கத்தா: சிபிஐ, ஆர்பிஐ போன்ற அரசு அமைப்புகளை பாரதிய ஜனதா கட்சி சிதைத்து வருவதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:
பாரதிய ஜனதா அரசானது திட்டமிட்டு நாட்டின் உயரிய அமைப்புகளை சிதைத்து வருகிறது. முன்னதாக அவர்கள் சிபிஐ மற்றும் ஆர்பிஐ போன்ற அரசு அமைப்புகளின் சரியான செயல்பாட்டை மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அழிவுகளில் இருந்து தேசத்தை காப்பாற்றுவதில் முக்கியமான பங்கை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வகிக்கும்.
தேசிய குடிமக்கள் பதிவு என்னும் செயல்பாட்டின் மூலமாக மக்களை மதரீதியாக பிரிப்பதிலே பாஜக நாட்டம் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை எதையும் திரிணமூல் காங்கிரஸ் சகித்துக் கொள்ளாது. பாஜகவிடம் இருந்து தேசத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது வரும் நாட்களில் முக்கிய பணியை மேற்கொள்ளும்.
காவிக் கட்சியான பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் யாத்திரையை மேற்கொள்கிறது. ஆனால் மறுபுறம் திரிணமூல் காங்கிரசார் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதற்கான யாத்திரையை மேற்கொள்கிறார்கள்
ஜனவரியில் நடைபெறும் மிகப்பெரிய எதிர்கட்சிகளின் பேரணியில் பங்கேற்க வருமாறு, அனைத்துஅரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.