சபரிமலை கோயிலில் பிரச்னையை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் சன்னிதானத்தில் முகாமிட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (திங்கள்கிழமை) குற்றம்சாட்டினார்.
சபரிமலை கோயிலில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் மீது மாநில அரசு நடத்தும் அடக்குமுறைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கோழிகோட்டில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசுகையில்,
"அவர்கள் ஐயப்ப பக்தர்கள் கிடையாது. சன்னிதானத்தில் பிரச்னையை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் தான் அங்கு முகாமிட்டுள்ளனர். சபரிமலையில் பிரச்னையை உண்டாக்க அரசு யாரையும் அனுமதிக்காது.
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தப்படுவதற்காக குறிவைக்கப்படுகிறது. சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க எனது அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு, ஐயப்பன் கோயிலில் வழிபட செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது பொறுப்பாகும்.
பக்தர்களுக்கு எதிராக அரசு இருக்கிறது எனும் தவறான பிரசாரங்களுக்கு ஊடகங்கள் இரையாக வேண்டாம். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதை தவிர்த்து அரசுக்கு வேறு வழியில்லை" என்றார்.