தெலங்கானாவில் வரும் 23-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்கும் பிரசாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கமாட்டார் என்று மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்சி குண்தியா தெரிவித்தார்.
தெலங்கானாவில் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதியை (டிஆர்எஸ்) எதிர்கொள்ள காங்கிரஸ், பிரஜகுமாரி, தெலுங்கு தேச கட்சி, தெலங்கானா ஜன சமிதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியுடன் கூட்டணி வைத்தது.
இதையடுத்து, தெலங்கானா மெட்செல்லில் வரும் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் சோனியா காந்தியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒன்றாக பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சோனியா காந்தி பங்கேற்கும் பிரசார மேடையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கமாட்டார் என்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஆர்சி குண்தியா தெரிவித்தார். அதேசமயம், நவம்பர் 28, 29 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பிரசாரங்களில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.